சத்தமில்லாமல் நுழைவது.. யுத்தமில்லாமல் அழிப்பது.. வைரமுத்து வரிகளில் உருவான கொரோனா பாட்டு!
சென்னை: வைரமுத்து வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மெட்டமைத்து பாடியுள்ள கொரோனா பாடல் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி இதுவரை உலகளவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். சீனாவை விட இத்தாலி மற்றும் அமெரிக்காவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் டோட்டல் லாக் டவுன் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். மேலும், இசையமைப்பாளர்கள் இன்றி, எஸ்.பி. பாலசுப்ரமணியமே அந்த பாடலுக்கு மெட்டமைத்து, பாடியுள்ளார்.
வைரமுத்துவின் யூடியூப் சேனலில், தற்போது அந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் இதோ உங்களுக்காக,
"கொரோனா
கொரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டைப் போல் கொடியது
சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கொரோனா
கொரோனா - அதைக்
கொல்லாமல் மனிதன் விடுவானா?
தொடுதல் வேண்டாம்
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை
மதமாய்ச் செய்வோம்
கொஞ்சம் அச்சம்
நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்
எத்தனை போர்கள்
மனிதன் கண்டான்
அத்தனை போரிலும்
அவனே வென்றான்
கொரோனாவையும்
கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை
வென்று முடிப்பான்
நாளை மீள்வாய் தாயகமே - நீ
நாளைய உலகின் நாயகமே"
என கொரோனாவால் அச்சப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இந்த பாடலை எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











