பிறைசூடன் என்ற அழகிய பெயருடையான் போயுற்றான்… கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் !
சென்னை : கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன திடீரென இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
பிறைசூடனின் மறைவுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிறை படத்தில்
1984ஆம் ஆண்டு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் சிறை திரைப்படத்திற்காக ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடலை முதல்முறையாக எழுதி திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.

பட்டி தொட்டி எங்கும்
ரஜினி நடித்த பணக்காரன் திரைப்படத்தில் வரும் நூறு வருடம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான் என்ற பாடல் ஒளிக்காத திருமணமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது.

இதயமே இதயமே
இதயம் முரளி என்று பெயரை பெற்றுத்தந்த இதயம் திரைப்படத்தில் வந்த இதயமே இதயமே என்ற பாடலை எழுதி இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிறைசூடன்.

பல விருதுகள்
கலைச்செல்வம் விருது, கபிலர் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் இடம் பெற்ற சோலப் பசுங்கிளியே... என்ற பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றார். அதே போல தாயகம் திரைப்படப் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். பிறைசூடன் பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல் சதுரங்கவேட்டை, புகழ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீ ராம ராஜ்ஜியத்திற்கு வசனமும் எழுதி உள்ளார்.

உயிரிழந்தார்
இந்நிலையில், சென்னை நெசப்பக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த பிறைசூடன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வைரமுத்து இரங்கல்
கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிறைசூடன் என்ற அழகிய பெயருடையான் போயுற்றான் நல்ல மனிதனாய் நல்ல கலைஞனாய் அறியப்பட்டோன் ஆவிதுறந்தான் சிந்தனையாளன் செயற்பாட்டாளன் சக கவிஞர்களைக் கொண்டாடும் கொள்கையாளன் சென்றுவிட்டான் தமிழோடு வாழ்வான்; அகமே அமைதியுறுக எனத் தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்கு
சென்னை நெசப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் பிறைசூடனின் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கவிஞர் பிறைசூடனின் இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் நடக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











