என் மீது பழி.. அது உண்மைக்கு புறம்பானது.. நான் என்ன செய்வது?.. நெத்தியடி அடித்த வைரமுத்து
சென்னை: வைரமுத்து இந்திய திரையுலகில் தவிர்க்கவே முடியாத பாடலாசிரியர். ஏழு முறை தேசிய விருது பெற்றிருக்கும் அவர் இப்போது இளம் பாடலாசிரியர்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் அவருக்கு முன்னர் போல் வாய்ப்புகள் பெரிதாக கிடைப்பதில்லை என்ற பேச்சும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது.
நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. முதல் பாடலே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் இசையிலும் தொடர்ந்து பாடல்கள் எழுதுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக்கொடுத்தது. அதன்படி ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து ஏகப்பட்ட கிளாசிக் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அவை இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
உடைந்த கூட்டணிகள்: தொடர்ந்து பல பாடல்களில் பணியாற்றிய இளையராஜாவும் வைரமுத்துவும் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் இணைந்து பணியாற்றி ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ராஜாவுடனான பிரிவுக்கு பிறகு ஏகப்பட்ட இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து வேலை செய்தார். அவற்றில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா இசையமைப்பில் எப்படி ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்தாரோ அதேபோல் ரஹ்மான் இசையிலும் கொடுத்தார். ஆனால் இந்தக் கூட்டணியும் சமீபமாக இணைந்து பணியாற்றுவதில்லை.

வைரமுத்து ட்வீட்: இந்நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "என்மீது ஒரு பழி உண்டு பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன் புன்னைகை மன்னன் படத்தில் 'வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்' என்றொரு பாட்டு
குளிப்பாட்டும் பாட்டு: மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு 'மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது உயிர்த்தலம் சிலிர்த்தது' என்று எழுதியிருந்தேன் 'உயிர்த்தலம் என்பதைமட்டும் மாற்றிக்கொடுங்கள்' என்றார் இசையமைப்பாளர். ஏன் என்றேன்? 'நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப் பிரச்சினை செய்வார்கள்' என்றார்.
உடனே மாற்றினேன்: சிந்தித்தபோது சரியென்றே பட்டது நான் உடனே 'நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது' என்று மாற்றிக்கொடுத்தேன் இதில் நியாயம் இருக்கிறது இன்னொரு படம் மனிதன் அதில் 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்' என்றொரு பாடல் "குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரைக் கேள்வி கேட்பது டார்வின் இல்லையே" என்று எழுதியிருந்தேன்.
புன்னகையோடு சொன்னேன்: இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன் என் காதோடு வந்து 'டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது' என்றார் நான் புன்னகையோடு சொன்னேன்: 'தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு' என்று மாற்ற மறுத்துவிட்டேன் எஸ்.பி.முத்துராமனிடம் சென்று நான் சொன்னதைச் சொல்லியிருக்கிறார். அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார்.
என் மீதுதான் பழி: டார்வின் பேசப்பட்டது இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன் பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல ஆனால் பழி என் மீதே வருகிறது என்ன செய்ய" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











