வைரமுத்துவே கலங்கிட்டாராம்.. ஏஐ எழுதிய கவிதை.. கவிப்பேரரசே எதிர்பார்க்கவில்லையாம்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. ஏழு முறை தேசிய விருது பெற்றிருக்கும் அவர்; சமீபத்தில்தான் ஞானபீட விருதையும் பெற்றார். அவருக்கு விருது கொடுத்ததற்கு ஜெயமோகன், சின்மயி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். அதேசமயம் பெரும்பாலானோர் பாராட்டவே செய்தார்கள். இந்நிலையில் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நிழல்கள் படத்தில் பாடல்கள் எழுதி திரைத்துறையில் அறிமுகமானவர் வைரமுத்து. அதற்கு முன்னதாகவே அவர் எழுதிய கவிதைகள் கல்லூரி பாட பிரிவுகளில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பின. அதனையடுத்து தொடர்ந்து இளையராஜாவுடன் பயணித்து பல வெற்றி பாடல்களை கொடுத்தார். ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் ஏற்பட; பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து என்ற க்ளாஸிக் கூட்டணி உடைந்துபோனது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி: இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு பல இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து வேலை பார்த்தாலும்; பெரிய பெயர் வாங்கியது என்றால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவர் பணியாற்றியபோதுதான். 2000களின் ஆரம்பத்தில் அவரும், ரஹ்மானும், மணிரத்னமும் சேர்ந்து எக்கச்சக்க ஹிட் பாடல்களை கொடுத்தார்கள். இசையில் ரஹ்மான் தன் பங்குக்கு புதுமை சேர்க்க; வைரமுத்து மொழியில் மேற்கொண்டு புதுமை சேர்த்து சிறந்த அனுபவங்களை பாடல்களாக கொடுத்தார்கள்.
வைரமுத்துவை சுற்றி பிரச்னை: நல்லபடியாக வைரமுத்துவின் கிராஃப் சென்றுகொண்டிருக்கும்போது அவர் மீது சின்மயி சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அப்போதிருந்து வைரமுத்துவுக்கும், ரஹ்மானுக்கும் இருந்த நெருக்கம் குறைந்தது. ஒருகட்டத்தில் தன்னுடைய பாடல்களில் வைரமுத்துவை எழுத வைப்பதையே நிறுத்திவிட்டார் ரஹ்மான். பொன்னியின் செல்வன், தக் லைஃப் போன்ற படங்களில்கூட இளங்கோ கிருஷ்ணன், கார்த்தி நேத்தா உள்ளிட்ட புதிய தலைமுறையினருடன் வேலை செய்தது இசை புயல்.
ஞானபீட விருது: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதற்காக பலரும் பாராட்டு தெரிவித்தாலும் சின்மயி, ஜெயமோகன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தார்கள். இது ஒருபக்கம் இருக்க வைரமுத்துவுக்கு இப்போது விருதுகளைவிடவும் பல பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுப்பதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான் தமிழ் பாடல்கள் பிழைக்கும் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஏஐ வளர்ந்துவிட்ட காலத்தில்கூட கவிப்பேரரசு சளைக்காமல் சிறந்த பாடல்களை கொடுப்பார் என்பது நம்பிக்கை.
கலங்கிய வைரமுத்து: இந்நிலையில் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஏஐ வந்த ஒரு வருடத்தில் அப்பாவிடம் சென்று ஏஐ கவிதை எழுதும் என கூறினேன். உடனே அவர், 'ஆஸ்திரேலியாவிலிருந்து நான்கு பறவைகள் வேறு இடத்தில் வாழ்வதற்காக பறந்து வருகின்றன. அவற்றில் ஒன்றை ஒருவன் சுட்டு விடுகிறான். மற்ற மூன்று பறவைகளின் மனநிலைமை குறித்து எழுத சொல்' என்றார். ஏஐயும் அப்படியே எழுதி கொடுத்தது. அதை படித்து பார்த்த பிறகு அப்பா கண்கல் கலங்கிவிட்டார். என்ன இப்படி கொண்டு வந்துவிட்டது என பிரமித்தார். 'நீ இப்போது போய்விட்டாய். நாங்கள் மூன்று பேரும் முன்னே செல்வதா இல்லை பின்னே செல்வதா என தெரியவில்லை. ஆனால் உனது கனவுகளையும் சுமந்துகொண்டு நாங்கள் செல்லப்போகிறோம்' என அந்த மூன்று பறவைகள் சொல்லும்படி ஏஐ எழுதியிருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications















