சொன்னப்படியே எஸ்பிபிக்காக 'பொன்மாலை பொழுதை' ஒலிக்கவிட்ட வைரமுத்து.. மொட்ட மாடியில் பிரார்த்தனை!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்ற நிலையில் கவிஞர் வைரமுத்து மொட்ட மாடியில் அமர்ந்து எஸ்பிபி குரலில் உருவான அவரது முதல் பாடலை ஒலிக்க விட்டு பிரார்த்தனை செய்தார்.
Recommended Video
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான கொரோனா பாதிப்பால் கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் தானே அனுமதியானார் எஸ்பி பாலசுப்ரமணியம்.
அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பரவியதும், நான் நலமாக இருக்கிறேன், மருத்துவமனை நிர்வாகம் என்னை வீட்டிலேயே இருந்து சிகிச்சைப் பெற கூறியது. ஆனால் நான்தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறினேன்.

சற்று பின்னடைவு
இன்னும் ஒரிருநாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் யாரும் கவலைப்பட வேண்டாம் என வீடியோ வெளியிட்டார். அவரது திடகார்த்தமான வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று நம்பினர். ஆனால் கடந்த 13ஆம் தேதி முதல் அவரது உடல்நிலை சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.

சினிமா ஆளுமைகள்
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டு வரும் அறிக்கைகள் ரசிகர்களை கலக்கப்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்களும், தமிழ் சினிமா ஆளுமைகளும் அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

கூட்டுப்பிரார்த்தனை
எஸ்பி பாலசுப்ரமணியம் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை அவரது குரலில் ஒலித்த பாடலை ஒலிக்கவிட்டு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களும் பங்கேற்றனர்.

வைரமுத்து தகவல்
இந்நிலையில் கவிஞரும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பருமான கவிஞர் வைரமுத்து, தனது வீட்டு மொட்ட மாடியில் மகன் மதன் கார்க்கியுடன் சேர்ந்து எஸ்பிபியின் பாடலை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தார். தனது முதல் பாடலான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை ஒலிக்கவிட்டார்.

பொன்மாலைப் பொழுது
இதுதொடர்பாக இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிட்டில், "இசை அன்பர்களே! எஸ்.பி.பி நலம்பெற
நல்லன்பு காட்டும் நேரம் இன்று மாலை 6 மணி.
என் முதற் பாடலுக்குத்
தன் உயிர்க்காற்றை ஊதியவருக்குப்
‘பொன்மாலைப் பொழுது'
ஒலிக்கவிட்டு உள்ளன்பு செய்வேன்.
நீங்களும்..." என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











