ஒரு பெண் வந்து.. பன்றி கறி அறுத்து.. அடடா வைரமுத்து கொரியன் பக்கம் இறங்கிட்டாரே.. அந்த விஷயம்?
சென்னை: கவிப்பேரரசு என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் வைரமுத்து. பாடல்கள், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு சேவையாற்றிவரும் அவர்; சமீபமாக பாடல்கள் அதிகம் எழுதுவதில்லை. அதேசமயம் தனது வாழ்நாளில் நடந்தவற்றை, நடப்பவைகளை கவிதை வடிவில் எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு லைக்ஸை அள்ளிவருகிறார்.
நிழல்கள் படத்தில் பாடல்கள் எழுத ஆரம்பித்து வைரமுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாடலாசிரியராக இருந்துவருகிறார். பாடல்கள் மட்டுமின்றி வெவ்வேறுவகையிலும் இலக்கிய தளத்தில் இயங்கிவரும் அவர்; இதுவரை ஏழு முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார். தொடர்ந்து பிஸியாக இயங்கிவந்த அவர் ஒரு சர்ச்சையை சந்தித்ததிலிருந்து அவருடன் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்டோர் எல்லாம் விலகிவிட்டார்கள்.
சோஷியல் மீடியாவில் பிஸி: இதன் காரணமாக முன்னர் போல் அதிகளவில் பாடல்கள் எழுதுவதில்லை. அதேசமயம் அவரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இப்போதைய பாடலாசிரியர்களில் அனுபவம் அதிகம் உள்ளவர் அவர்தான் என்று கோரிக்கைகள் வலுத்தாலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது ஒருபக்கம் இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களையும், தனது வாழ்வில் நடக்கும் விஷயங்களையும் எக்ஸ் தளத்தில் கவிதை வடிவில் பதிவிடுவதையும் வழக்கமாக்கியிருக்கிறார்.

வைரமுத்துவின் ட்வீட்: இந்நிலையில் அவர் கொரியன் உணவு முறை குறித்து தனது எக்ஸ் தளத்தில், "சென்னையில்
உலக உணவுக் கடைகள்
பெருகிவிட்டன
மாதம் ஒருநாள் என்னைக்
கொரியன் உணவகம்
கூட்டிச் செல்வார்கள்
மதன் கார்க்கியும் கபிலனும்
கூழாங்கல் அளவில்
இனிப்பில் ஊறிய
உருளைக்கிழங்குகள்,
தித்திக்கும் காரத்தில்
முட்டைக்கோஸ்
மற்றும் கொரியன் கீரைகள்
பசியூட்டிகளாய்ப் பரிமாறப்படும்.
பிறகு சூப்
கடல் பாசியில் அவித்த
கோழி இறைச்சியின் சாறுவரும்.
அது
நவம்பர் மாதத்தில்
போர்த்துப் படுக்கும்
போர்வைச் சூட்டின்
பதத்தில் இருக்கும்
பருகி முடிக்கையில்
வெள்ளை தேவதையாய்
ஒரு கொரியப் பெண் வருவாள்;
மேஜையில் அடுப்பு மூட்டுவாள்;
தீ வளர்த்து
வெண்பன்றியின் விலாக்கறி அறுப்பாள்
அடங்கி எரியும் தீக்கொழுந்தில்
கறியின் வெண்ணிறம்
பொன்னிறம் ஆகும்வரை வாட்டுவாள்;
பின்னர் அதைச்
சிறு துண்டுகள் செய்வாள்
இனி உண்ணத் தொடங்குவது
நம் வேலை
லெட்யூஸ் இலைகளுக்குள்
பன்றிக் கறியைச் சுருட்டவேண்டும்.
அதில் வெங்காயத் தழைகள்;
இங்கிலிஷ் இலைகள்;
பூண்டுத் துண்டுகள்;
மற்றும் நாவுக்கேற்ற பச்சைமிளகாய்
அனைத்தையும் திணித்து
பீடாபோல் உருட்ட வேண்டும்
வாயின் ஓர் ஓரம் செருகிக்
கடைவாய்ப் பற்களால்
கடித்துண்ண வேண்டும்
கொரியன் உணவு முறையுள்
இதுவும் ஒன்று
இங்கே தானிய உணவு
தள்ளி வைக்கப்பட்டிருப்பதால்
எவ்வளவு உண்டாலும்
இரைப்பை நிறைவதில்லை
அதனால்தான்
கொரியன்களுக்குப்
பெரும்பாலும் தொப்பையில்லை
புரிகிறதா தோழர்களே!
வயிற்றை அடைக்காமல்
சாப்பிடுகிறவன் பாக்கியவான்
வயிற்றில் இருக்கும்
மிச்சத்தில்தான்
சேமிக்கப்படுகிறது
அவரவர் ஆயுள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











