புயலுக்கு பின் அமைதி.. இளையராஜா பற்றிய கேள்வி.. வைரமுத்து ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: கடந்த சில நாட்களாகவே இளையராஜா - வைரமுத்து பிரச்னைதான் திரைத்துறையிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. பாடலுக்கு முக்கியம் இசையா, மொழியா என்று வைரமுத்து பேசியது விவாதத்தை கிளப்ப; கங்கை அமரனின் பேச்சு அந்த விவாதத்தை பிரச்னையாக மாற்றியது. பலர் இளையராஜாவுக்கும், பலர் வைரமுத்துவுக்கும் சப்போர்ட் செய்துவரும் சூழலில், பொதுவெளியில் இளையராஜா குறித்து வைரமுத்துவிடம் இந்தப் பிரச்னைக்கு பிறகு கேள்வி முன்வைக்கப்பட்டது.
வைரமுத்து தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்க முடியாத ஆளுமை. 7000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எழுத்துக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தவர். அரசு பணி செய்துகொண்டிருந்த அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து; பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான நிழல்கள் படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என்று எழுதி மெர்சல் செய்தார்.

மேஜிக் கூட்டணி: முதல் பாடலிலேயே ரசிகர்களை மட்டுமின்றி இளையராஜாவையும் கவர்ந்துவிட்டார். இதன் காரணமாக ராஜாவின் கோட்டைக்குள் ஆஸ்தான கவிஞராக மாறினார் வைரமுத்து. இரண்டு பேரும் இணைந்து, புன்னகை மன்னன், சிந்து பைரவி, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என ஏராளமான படங்களில் பணிபுரிந்தார்கள். அவர்கள் இருவரும் இணைந்த பாடல்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டணி பல மேஜிக்குகளை நிகழ்த்தியது என்பது உண்மை.
பிரிந்த கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த கூட்டணி சில காரணங்களால் உடைந்தது. அதுகுறித்த விளக்கத்தை இரண்டு பேருமே இதுவரை சொல்லவில்லை. அவர்களை சேர்த்துவைக்க பலர் முயன்று பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. தொடர்ந்து இருவரும் தங்களது பணியில் பிஸியாக இருந்து பெரும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள்.
கிளம்பிய விவாதம்: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரு பட விழாவில் கலந்துகொண்டார் வைரமுத்து. அதில் பேசிய அவர், 'பாடலுக்கு இசை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மொழியும் முக்கியம். இதை புரிந்துகொள்பவன் ஞானி; புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி' என்று கூறியிருந்தார். அவர் இவ்வாறு பேசியதை வைத்து, வைரமுத்து இளையராஜாவை தாக்கி பேசிவிட்டார் என்று இசைஞானியின் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள்.
கங்கை அமரன்: இந்த நிலையில் கங்கை அமரன் வெளியிட்டிருந்த வீடியோவில் வைரமுத்துவை தாக்கி பேசினார். அவர் அவ்வாறு பேசியதை அடுத்து இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியது. ஒருதரப்பினர் இளையராஜாவுக்கும், ஒருதரப்பினர் வைரமுத்துவுக்கும் ஆதரவாக தங்களது குரல்களை எழுப்ப தொடங்கினர். வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் பேச தொடங்கிவிட்டதால் இனி நான் பேசப்போவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் படு வைரலானது.
இளையராஜா பற்றிய கேள்வி: நிலைமை இப்படி இருக்க மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் வைரமுத்து. அவரிடம் செய்தியாளர்கள் இளையராஜா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வைரமுத்து பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் எம்.எஸ்.வியா இல்லை கண்ணதாசனா என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், 'உயிரும் உடலும் போல' என்று கூறிவிட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications











