மருதகாசி எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்.. "மாசிலா உண்மை காதலி” மறக்க முடியுமா?.. வைரமுத்து உருக்கம்!

சென்னை: 1920ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி அரியலூரில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை அந்த காலத்திலேயே கொடுத்து அசத்திய கவிஞர் மருதகாசியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. "மருதகாசி எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்" என அவரை பற்றிய நினைவுகளை கவிதை வடிவில் பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.

முன்னணி நடிகர்களை தாண்டி பல ஜாம்பவான்களை தமிழ் சினிமா பிரபலங்கள் கூட கொண்டாடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மறைந்த பழம்பெரும் பாடலாசிரியர்களை பாடலாசிரியர்களாவது நினைவில் கொள்ள வேண்டும் என்கிற நோக்குடன் கவிஞர் வைரமுத்து மருதகாசிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Vairamuthu remembers Legendary Lyric Writer Maruthakasi on his death anniversary

1989ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி தனது 69வது வயதில் மருதகாசி உயிரிழந்தார். இன்று அவரது நினைவஞ்சலியை முன்னிட்டு வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவை இங்கே காணலாம்.

மருதகாசி எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்:

"பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
கண்ணதாசனும்
தடம்பதிப்பதற்கு முன்பே
திரைப்பாட்டில் இடம்பிடித்தவர்
மருதகாசி

அந்த வேளாண் குடும்பத்து
விவசாயப் புலவனின்
நினைவு நாள் இன்று

'அலிபாபாவும் 40 திருடர்களும்'
அனைத்துப் பாடல்களும் அவர்தான்

உத்தமபுத்திரனில்
'முல்லை மலர்மேலே
மொய்க்கும் வண்டுபோலே'

மந்திரி குமாரியில்
'வாராய் நீ வாராய்'

தாய்க்குப்பின் தாரத்தில்
'மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா'

மன்னாதி மன்னனில்
'ஆடாத மனமும் உண்டோ'

கைதி கண்ணாயிரத்தில்
'கொஞ்சிக் கொஞ்சிப்பேசி
மதி மயக்கும்'

கொடுத்து வைத்தவளில்
'நான் யார் தெரியுமா?'

மக்களைப் பெற்ற மகராசியில்
'ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா?'

நினைத்ததை முடிப்பவனில்
'கண்ணை நம்பாதே'

இப்படி நூற்றுக்கணக்கான
வெற்றிப் பாடல்கள்
மருதநிலக் கவிஞர்
மருதகாசி படைத்தவை

நிலத்தில் விளைந்து
சாய்ந்திருக்கும்
நெற்கதிர்களைப் பார்த்து
'வளர்ந்துவிட்ட பருவப்பெண்போல்
உனக்கு வெட்கமா - தலை
வளஞ்சு சும்மா பாக்குறியே
தரையின் பக்கமா -இது
வளர்த்துவிட்ட தாய்க்குத்தரும்
ஆசை முத்தமா"

என்று வேளாண்மொழியில்
தற்குறிப்பேற்ற அணி எழுதியவர்

வாழும் காலத்திலேயே
அவர் சாதனைகள்
உரத்த குரல் இல்லாமல்
உலர்ந்து போனதால்
அதிவிரைவில் அவர்
மறக்கப்பட்டுவிட்டார்

நினைவூட்டுவதற்கு
இரண்டு வேண்டும்

இறந்தவன் பெருமை உணர்ந்த
குடும்பம் வேண்டும்
அல்லது
நிலைத்த ஒரு நிறுவனம் வேண்டும்

குடும்பம் என்றால்
படத்திற்கு 5பேர் பூப்போடுவார்கள்
நிறுவனம் என்றால்
50பேர் கைதட்டுவார்கள்

இந்த இரண்டும் இல்லாதவர்கள்
ஓராண்டு நினைவு திரும்புமுன்னே
நூறாண்டு மறக்கப்படுகிறார்கள்

எத்துணை பெரிய
கொம்பனுக்கும் இதுவேநேரும்

நன்றியுள்ள சமூகத்தில்தான்
கலைஞன் உயிரோடு இருக்கிறான்

மருதகாசி
எனதுவீட்டில் உயிரோடிருக்கிறார்" என கவிஞர் வைரமுத்து மருதகாசியை நினைவு கூர்ந்துள்ளார். அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் இடம்பெற்ற "மாசிலா உண்மை காதலே.. மாறுமோ செல்வம் வந்தபோதிலே" பாடல் வரிகளை எல்லாம் ரசிகர்கள் ஒருநாளும் மறக்கமாட்டார்கள் என ரசிகர்கள் வைரமுத்துவின் பதிவுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X