“உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம்”: காவிரி கரையோரம் வைரமுத்து தீட்டிய பொன்னி நதி கவிதை
திருச்சி: கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து சமீபத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியை காண காவிரி பலத்திற்கு சென்றுள்ளார்.
அந்த ரம்மியமான சூழலில் இருந்தபடி வைரமுத்து எழுதிய கவிதை இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து
தமிழ் இலக்கிய உலகில் வைரமுத்துவின் கவிதைகளுக்கு எப்போதுமே பெரிய வாசகப் பரப்புள்ளது. அவரது கவிதைகளில் இருக்கும் வீரியமும், வார்த்தைகளின் கோர்வையையும் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதேபோல், பாடல்களிலும் வைரமுத்துவின் வைர வரிகள், பல மாயங்களை நிகழ்த்தும். இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ் என முன்னணி இசையமைப்பாளர்களோடு சேர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

பொன்னி நதி கவிதை
கடந்த சில மாதங்களாக திரைப்படங்களுக்கு ரொம்ப குறைவாகவே பாடல்கள் எழுதி வருகிறார் வைரமுத்து. இந்நிலையில், சமீபத்தில் திருச்சிக்கு சென்ற வைரமுத்து, அங்கு பெருக்கெடுத்து ஓடியை காவிரி நதியை நேரில் சென்று பார்த்துள்ளார். கர்நாடக, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அழகை காண காவிரி பலத்திற்கு சென்ற வைரமுத்து, அங்கு தலைவிரித்து ஓடும் காவிரி நதியை கண்டு கவிதை வடித்துள்ளார். மேலும் அந்த கவிதையை தனது குரலிலேயே பதிவு செய்து, அவர் காவிரியை ரசிக்கும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

கரிகாலன் கால் நனைத்தது நீதான்
அந்த கவிதை "பாய்ந்தோடும் காவிரியே எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே, வரலாற்றின் ரத்தமே எங்கள் வயல்களின் திரவச் சாப்பாடே பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாக கேள்விப்பட்டு கிறுக்கெடுத்து ஓடி வந்தேன், கரிகாலன் கால் நனைத்தது நீதான்.".என்று தொடங்குகிறது. இந்த கவிதையில் காவிரி நதியின் சிறப்புகளை கண்முன்னே கொண்டுவந்துள்ள வைரமுத்து, காதல், வீரம், அரசியல் என அனைத்தையும் பாடியுள்ளார்.

பறைகொட்டி பாவி மனம் கூத்தாடும்
மேலும், இந்தக் கவிதையில்"ராஜராஜனின் வாள்முனையை உழவனின் ஏர்முனையை தீட்டி தந்தவள் நீதான், கரைதொட்டு பாய்ந்தோடும் காவேரியே உன் அழகில் பறைகொட்டி, பறைகொட்டி பாவி மனம் கூத்தாடும் உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே கடலோடு சேராமல் கழனிகளில் சேர்வாயே மலைத் தலைய கடற்காவேரியென கடியலூர் உருத்திர கண்ணன் முதல் காவிரி தாயே காவிரி தாயே...காதலர் விளையாட பூ விரித்தாயேயென கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் நுராயிரம் புலவருக்கு பாடுபொருளாகிய பால்நதியே நீ யாரோ எமக்கிட்ட பிச்சையல்ல எங்கள் உரிமை நீ அரசியலின் ஆசிர்வாதமல்ல எங்கள் அதிகாரம் உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம் அணைகட்ட விடமாட்டோம்" என நிறைவு செய்துள்ளார்.

இணையத்தில் ட்ரெண்டாகும் கவிதை
சோழ மண்டலத்திற்கு நீர் ஆதாரமாக இருக்கும் காவிரியின் சிறப்பை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து 'பொன்னி நதி பாடல்' வெளியாகியிருந்தது. எப்போதுமே மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வைரமுத்து கண்டிப்பாக இருப்பார். ஆனால், தற்போது வெளியான பொன்னி நதி பாடலை, இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்நிலையில், வைரமுத்து எழுதியுள்ள பொன்னி நதி கவிதை, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











