Vairamuthu on A.R.Rahman - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அது என்னனே தெரியாது.. முதல்முறையாக மனம் திறந்த வைரமுத்து
சென்னை: Vairamuthu on A.R.Rahman (ஏ.ஆர். ரஹ்மான் குறித்து வைரமுத்து) பாடலாசிரியர் வைரமுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். அவர் பாடல்கள் எழுத வந்த பிறகுதான் சினிமா பாடல்களில் புதுக்கவிதை எளிதாக புழங்கியது. 7 முறை தேசிய விருது பெற்றிருக்கும் அவர் இப்போதும் இளம் பாடலாசிரியர்களுடன் போட்டிப்போட்டு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட பாலா இயக்கும் வணங்கான் படத்தில் முழு பாடல்களையும் எழுத வைரமுத்து கமிட்டாகியிருக்கிறார்.

வைரமுத்து - இளையராஜா - பாரதிராஜா: தமிழ் சினிமாவில் எப்போதும் காலங்கடந்தும் ரசிக்கப்படும் ஒரு கூட்டணி உருவாகும். அப்படி உருவானதுதான் வைரமுத்து - இளையராஜா - பாரதிராஜா கூட்டணி. மூன்று பேருமே தேனி சுற்றுவட்டாரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நிழல்கள் படத்தின் மூலம் இளையராஜா, பாரதிராஜாவுடன் இணைந்த வைரமுத்து அதன் பிறகு மண் வாசனை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை என பல படங்களில் இணைந்து பணியாற்றினார். இவர்களது கூட்டணியில் உருவான பாடல்கள் தலைமுறைகள் கடந்து ரசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பிரிவு: இன்னும் பல காலம் மூன்று பேரும் இணைந்து பணியாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் எழுந்த கருத்து வேறுபாடு இந்தக் கூட்டணியை உடைத்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாகியும் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து பணியாற்றவில்லை. இருவரை சேர்ப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பலன் அளிக்கவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி: இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தார். இளையராஜாவுடன் இணைந்து மரபு தமிழையும், கிராமத்து தமிழையும் பாடலாக கொடுத்தவர் ரஹ்மானுடன் இணைந்து நவீன தமிழை பாடலாக கொடுத்தார். இதனால் இந்தக் கூட்டணி 90களில் தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்தது. ரோஜாவிலிருந்து ஓகே கண்மணிவரை இரண்டு பேரும் இணைந்து பணியாற்றினார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் இப்போது இரண்டு பேரும் இணைந்து பணியாற்றுவதில்லை.
முக்கியமான பாடல்: ரஹ்மான் - வைரமுத்து இணைந்து ஏராளமான தரமான பாடல்களை கொடுத்துள்ளனர். அதில் முக்கியமானது கருத்தம்மா பட பாடல்கள். கிழக்கு சீமையிலே படத்துக்கு பிற்கு மீண்டும் ரஹ்மானுடன் பாரதிராஜா சேர்ந்து பணியாற்றினார். இருவரும் இணைந்த கிழக்கு சீமையிலே பாடல்கள் போலவே இந்தப் பட பாடல்களும் மெகா ஹிட்டாகின. குறிப்பாக போறாளே பொன்னுத்தாயி பாடல்.

வைரமுத்து பகிர்ந்த ரகசியம்: இந்நிலையில் அருள்நிதி, வைரமுத்து உள்ளிட்டோர் நடித்திருக்கும் திருவின் குரல் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து பேசுகையில், "கலைஞர்கள் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் கலாசார பரிவர்த்தனை இருந்தால் கலைக்கு நல்லது. நாங்கள் பழைய மதுரை மாவட்டத்தில் இன்றைய தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.
அங்கு பிறந்து வளர்ந்ததால் அங்கு புழங்குகிற வார்த்தை, சாப்பிடும் உணவு, பறக்கும் பறவை, மனிதர்கள், வாழ்க்கை முறை அங்கு பயன்படுத்தப்படுகிற சொளகு, பஞ்சாரம், ஒலக்கை போன்ற கருப்பொருள்கள் எல்லாமே எங்களுக்கு தெரியும். அதனால் அந்த வார்த்தைகளை வைத்தால் பாரதிராஜா புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வார். வேறு யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாது: பால் பீய்ச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்து கோழிய விட்டு' என்று எழுதும்போது ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் கேட்டார், பஞ்சாரம்னா என்ன சார் என்று. அதேபோல் பாடல் பாட வந்த ஸ்வர்ணலதாவும் சார் பஞ்சாரம்னா என்ன சார் என்று கேட்டார். அதற்கு நான் கோழியை மூடும் கூடை என்று சொன்னேன். அப்படினா என்ன சார் என்று திரும்பவும் கேட்டார். இனிமேல் உங்களுக்கு விளக்கவே முடியாது என சொல்லிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











