வைரமுத்துவுக்கு குறைந்த சம்பளம்.. சங்கடமாகி ஏவிஎம் சரவணன் செய்த சூப்பர் செயல்.. உருகும் கவிப்பேரரசு
சென்னை: ஏவிஎம் சரவணன் உடல்நல குறைவால் நேற்று காலை உயிரிழந்தார். ரஜினிகாந்த், சூர்யா, சிவக்குமார், நாசர் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். நேற்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோவில் இருக்கும் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வைரமுத்துவின் சோஷியல் மீடியா பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு நிர்வகித்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினிகாந்த்தை வைத்து எட்டு படங்கள், கமல்ஹாசனை வைத்தும் ஏராளமான படங்களை இவரது நிர்வாகத்தில்தான் அந்த ஸ்டூடியோ தயாரித்தது. அதேபோல் நிறுத்தி வைத்திருந்த தயாரிப்பு பணிகளை மீண்டும் சரவணன் தொடங்கி; ஜெமினி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
நிறுத்திக்கொண்ட நிறுவனம்: ஜெமினி கொடுத்த வெற்றிக்கு பிறகு ரஜினியை வைத்து சிவாஜி, சூர்யாவை வைத்து அயன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து சக்சஸாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் நாளடைவில் மாறிய சினிமாவின் தன்மை, பல்கி பெருகிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிப்பு பணியை மொத்தமாக நிறுத்தியது ஏவிஎம். தொடர்ந்து சரவணனும் அனைத்து பணிகளிலிருந்தும் விலகி வயோதிகம் காரணமாக ஓய்வு பெற்றுவந்தார்.

உயிரிழந்த சரவணன்: சூழல் இப்படி இருக்க 86 வயதான சரவணன் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், சூர்யா, சிவக்குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஏவிஎம் ஸ்டூடியோவிலேயே இருக்கும் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வைரமுத்து போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வைரமுத்து போஸ்ட்: அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "நேற்றோடு முடிந்துவிட்டது
ஏவி.எம்.சரவணன் அவர்களின்
பெளதிக வாழ்க்கை
இனி
நினைவின் வெளிகளில்தான்
அவரைச் சந்திக்க முடியும்
ஒரு சம்பவம் சொல்கிறேன்:
சிவாஜி படத்திற்குப்
பாட்டெழுதியதற்கு ஊதியமாக
எனக்கொரு காசோலை கொடுத்தார்
காசோலைகளை நான்
பிரித்துப் பார்ப்பதில்லை;
பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்
சில வாரங்களுக்குப் பிறகு
வேறொரு பாட்டுப் பதிவுக்காக
ஏவி.எம் கலைக்கூடத்திற்குள்
நுழைகிறது என் கார்
தன் அறையின்
கண்ணாடி வழியே
என் காரைப் பார்த்த
சரவணன் அவர்கள்
வீடு திரும்பும்போது
தன்னைப் பார்த்துச் செல்லும்படி
சொல்லியனுப்பினார்; சென்றேன்
கையில் ஓர் உறை வைத்திருந்தார்;
நான் குழப்பமானேன்
அவர் சொன்னார்:
"போனவாரம் சிவாஜிக்கு
வாலி ஒரு பாட்டெழுதினார்.
உங்களுக்குக் கொடுத்த
ஊதியத்தையே
அவருக்கும் கொடுத்தோம்;
அவரோ மேலும் ஒருலட்சம்
வேண்டுமென்று கேட்டார்;
கொடுத்துவிட்டோம்.
அவர் சென்றபிறகு யோசித்தோம்;
வாலியோடு ஒப்பிடுகிறபோது
உங்களுக்குக் குறைத்துக்
கொடுத்திருக்கிறோமே;
அது நீதியில்லையே; ஆகவே
வாலிக்குக் கொடுத்த தொகையை
உங்களுக்கும் கொடுப்பதென்று
முடிவெடுத்தோம்;
அதுதான் இந்தத் தொகை.
இதில் ஒருலட்சம் இருக்கிறது
பெற்றுக்கொள்ளுங்கள்" என்று
எழுந்துநின்று வழங்கினார்
நான் பெற்றுக்கொண்டு
"இரண்டாம் நன்றி உங்களுக்கு;
முதல் நன்றி வாலிக்கு" என்றேன்
'ஏன்' என்றார்
"என் சம்பளத்தை
உயர்த்தியவர் அவர்தானே;
வாலி; வாழி" என்றேன்
வாய்விட்டுச் சிரித்தார்
அந்தச் சிரிப்பையும் சேர்த்தல்லவா
நேற்று மின்மயானம் எரித்துவிட்டது
எரி மேடையில்
உடல் கிடத்தப்பட்டிருந்தபோது
காசோலையில் கையொப்பமிட்ட
அவர் கையையே
பார்த்துக்கொண்டிருந்தேன்;
கண்ணில் நீர் முட்டியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











