Vairamuthu on Ilaiyaraja - இளையராஜாவை தோண்டினால் பல விஷயங்கள் தெரியவரும்.. உண்மையை சொன்ன வைரமுத்து
சென்னை: Vairamuthu (வைரமுத்து) பாடலாசிரியர் வைரமுத்து இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும், இயக்குநர் பாரதிராஜா குறித்தும் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழின் முன்னணி பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். எந்த சூழல் சொன்னாலும் அதில் தனது முத்திரையை ஆழமாகவே பதித்துவிடுபவர் அவர். அதனால்தான் அவரால் ஏழு முறை தேசிய விருது பெற முடிந்தது. அவர் இப்போதும் இளம் பாடலாசிரியர்களுடன் போட்டிப்போட்டு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் முன்னர் போல் பெரிதாக கிடைக்கவில்லை என்ற கருத்து பெரும்பாலானோரிடத்தில் இருக்கிறது.

வணங்கான் படத்தில் பாடல்கள்: திரைத்துறையிலிருந்து அவர் ஒதுக்கப்படுகிறார் என பலர் கூறும் சூழலில் பாலா இயக்கும் வணங்கான் படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதவிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே வணங்கான் படத்தின் மூலம் நிச்சயம் வைரமுத்து கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர். அந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தக் கூட்டணியில் ஏற்கனவே பரதேசி பட பாடல்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.
திருவின் குரல் படத்தில் வைரமுத்து: அவர் மீது வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டுதான் அவர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தால் ஒதுக்கப்பட காரணம் என கூறப்படுகிறது. அவர் முன்னர் போல் பல படங்களில் பாடல்கள் எழுதாவிட்டாலும் ஒருசில படங்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அந்தவகையில் அருள்நிதி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திருவின் குரல் படத்திலும் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

திருவின் குரல் ரிலீஸ்: திருவின் குரல் படத்தை ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார். அருள்நிதி ஹீரோவாக நடிக்க பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆத்மிகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
நிகழ்ச்சியில் வைரமுத்து: இதற்கிடையே திருவின் குரல் படத்தின் ப்ரோமோஷனில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும், பாரதிராஜா குறித்து அவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சியில் பேசிய அவர், "பாரதிராஜாவின் படங்களில் கிராமங்களின் மண் வாசனை மணக்கும்இன்று பல பேருக்கு தெரியாத வீட்டின் கருப்பொருள்கள் அவர் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இளையராஜாவை தோண்டுங்கள்: இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் தமிழ்நாடு நகரமயமாகிவிட்ட பிறகு அந்த வட்டாரச்சொற்களை பற்றி தெரியவேண்டுமென்றால் பாரதிராஜாவின் படங்களை பார்த்தால் போதும். இன்னும் சொல்லப்போனால், பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்வதற்கு இன்று கீழடியை தோண்டும் நாம்;

இன்னும் 100 வருடங்கள் கழித்து பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பாரதிராஜாவை தோண்டினால் போதும், வைரமுத்துவை தோண்டினால் போதும், நான் இதை சொல்ல கூச்சப்படவில்லை, இளையராஜாவை தோண்டினால் போதும்" என்றார். இளையராஜாவும் வைரமுத்துவும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 30 வருடங்களுக்கும் மேலாக இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











