பாட்டு வரிகள் படத்திற்கு பலம்.. கங்கை அமரன் பேச்சுக்கு வைரமுத்து பதிலடி?..சூடு பிடித்த சண்டை!
சென்னை: 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வைரமுத்து பற்ற வைத்து தீ குபீரென பற்றிக் கொண்டு எரிகிறது. வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியது இளையராஜாவின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு பகிரங்கமாக வைரமுத்துவை தாக்கி சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து விட்டார். வைரமுத்துவை வளர்த்து விட்டதே நாங்கள்தான் என்றும் இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும் வைரமுத்துவுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை என விளாசிவிட்டார்.

மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது என வைரமுத்துவை எந்த அளவுக்கு மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக பேசி இதற்கு மேல் வைரமுத்து இளையராஜா பற்றி தவறாக ஏதாவது பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்துள்ளார்.
வைரமுத்து பேச்சு: இளையராஜாவின் பெயரை கூட குறிப்பிடாமல் வைரமுத்து சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் ஒரு நல்ல பாடல் என தனது கருத்தை முன்வைத்து இருந்தார். இசைப் பெரியதா? பாடல் வரி பெரியதா? என கேட்பவன் ஞானி அல்ல அஞ்ஞானி என இளையராஜாவை மறைமுகமாக சீண்டி இருந்தார்.
வைரமுத்துவை தாக்கி பேசிய கங்கை அமரன்: ஆனால், கங்கை அமரன் நேரடியாக வைரமுத்துவை தாக்கி பேசி இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இளையராஜா பயோபிக்கிற்கு கிளைமேக்ஸே விரைவில் கிடைத்து விடும் போல இருக்கு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். வைரமுத்துவின் சாதனைகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல் இந்த சண்டையை ஊதி பெரிதாக்கி விட்டார் கங்கை அமரன் என கழுவி ஊற்றி வருகின்றனர்.
பாட்டு வரிகள் படத்திற்கு பலம்: இந்நிலையில், கங்கை அமரனின் பேச்சுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மீண்டும் மறைமுகமாக வைரமுத்து பதில் சொல்லி உள்ளாரா என தற்போது அவரது ட்வீட்டை வைத்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பாட்டு வரிகள் படத்திற்கு பலம் என தனது புதிய ட்வீட்டில் மீண்டும் உறுதியாக பேசியுள்ளார் வைரமுத்து.
வைரமுத்து ட்வீட்: பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சிறு பட்ஜெட் படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார் வைரமுத்து. இந்நிலையில், அவர் பாடல் வரிகளில் வெளியான புதிய படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

"கணிசமான கவனம்பெற்ற
FINDER திரைப்படத்தின்
கலைக் குழுவினர்
இயக்குநர்
வினோத் ராஜேந்திரன் தலைமையில்
வீட்டுக்கு வந்து
வாழ்த்துப் பெற்றனர்;
பாட்டு வரிகள்
படத்திற்கு பலம் என்றனர்
வெற்றிகள்
அரிதாகிப்போன சூழலில்
சிறிதாகிய வெற்றியும்
பெரிதாகத் தோற்றுகிறது
ஒவ்வொருவரையும்
வாழ்த்தினேன்
'அடுத்த படத்திற்கேனும்
தமிழில் தலைப்புவைக்க
வேண்டும் தம்பி' என்றேன்
'அப்படியே செய்வேன் ஐயா'
என்றார் இயக்குநர்
இந்த நிகழ்ச்சியில்
நான் அடைந்த
பெருமகிழ்ச்சி அதுதான்" என பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் நேரடியாக கங்கை அமரன் பேச்சுக்கு பதிலடி கொடுங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். இளையராஜா vs வைரமுத்து சண்டை பூதாகரமாக வெடித்து வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











