என் அடுத்த படைப்பு 'ஈழ காவியம்'.. அதற்காக இலங்கை போக விரும்புகிறேன்! - வைரமுத்து

வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார்.
இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து.
இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும் பார்த்து, பேசி, வாழ்ந்து எழுதப் போகிறாராம்.
இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், "எனது அடுத்த படைப்பு ஈழக் காவியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான களப் பணிகள் மிகப் பெரியவை என்பதால் இலங்கைக்கே சென்று சில காலம் இருக்க ஆசைப்படுகிறேன்.
அந்த மண்ணையும், காற்றையும், நிலத்தையும், நீரையும், மனிதர்களையும் தொட்டு உணராமல் படைத்தால், அது முழுமையான படைப்பாக இருக்காதே?," என்றார்.


Click it and Unblock the Notifications











