கலைஞர்கள் சம்பந்திகளாகிறார்கள்.. உமாபதி - அர்ஜுன் மகளுக்கு வைரமுத்து வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவரது சண்டைக்காட்சி, உடற்கட்டுக்கென்று இன்றுவரை ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
அர்ஜுன் நடிகராக மட்டும் திரையுலகில் ஜொலிக்காமல் இயக்குநராகவும் ஜொலித்தவர். சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி கர்ணா, கன்னடத்தில் துட்ட முட்ட ஆகிய படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார். தற்போது லீடிங் ஹீரோவாக இருக்கும் விஷால்கூட அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோவில் அர்ஜுன்: தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் வயதான பிறகு ஹீரோ ரோலுக்கு டாட்டா சொல்லிவிட்டார். இருந்தாலும் இன்னமும் ஹீரோ போன்றே இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். தியேட்டரில் விஜய் எண்ட்ரிக்கு எப்படி அப்ளாஸுகள் எழுந்தனவோ அதேபோல் அர்ஜுனின் எண்ட்ரிக்கும் எழுந்தன.
மகள் ஐஸ்வர்யா: நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
நிச்சயதார்த்தம்: சூழல் இப்படி இருக்க கோலிவுட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
அதனையொட்டி அர்ஜுனும், தம்பி ராமைய்யாவும் பத்திரிகை வைக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். அதன்படி வைரமுத்துவுக்கும் அவர்கள் பத்திரிகை வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் அர்ஜுன் நடிகர் தம்பி ராமையா ஆகிய கலைஞர்கள் இருவரும் சம்பந்திகளாகிறார்கள்
அர்ஜுன் மகளும் தம்பி ராமையா மகனும் மணமக்களாகிறார்கள் அழைப்பிதழ் தந்தார்கள் என் நேசத்துக்குரிய கலைஞர்களின் பாசத்துக்குரிய பிள்ளைகள் வளமாக வாழ்வார்கள் என்று வாழ்த்தினேன்" என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











