க/பெ. ரணசிங்கத்துக்கு காத்திருக்கும் வைரமுத்து.. ’இது மனித குலத்தின் வலி’ என பாராட்டு கவிதை!
சென்னை: விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் படத்தின் டீசரை பார்த்த கவிஞர் வைரமுத்து அந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அறம் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கி இருக்கும் படம் க/பெ. ரணசிங்கம்.
நேற்று தனது படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

குவிகிறது பாராட்டு
கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தை பற்றி சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர். விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரது நடிப்பும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் மத்தியில் சபாஷ் போட வைத்திருக்கிறது. ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் ரிலீசுக்காக விஜய்சேதுபதி ரசிகர்கள் வெயிட்டிங்.

ஜி.வி. பிரகாஷ் தங்கை
மேலும், இந்த படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் போராட்டக் களத்தில் அவரும் அமர்ந்து போராடுகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் பல முயற்சிகளையும் பவானிஸ்ரீ எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெறும்
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டீசரை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து, " நல்ல கலைகளெல்லாம்
மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.
இந்தப் படம் இன்னொரு வலி.
இது வெற்றிபெறக் கூடும் என்று
என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.
பார்ப்போம்..."
என கவிதை நடையில் விஜய்சேதுபதிக்கும் க/பெ. ரணசிங்கம் படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேசிய விருது
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்தில் யுவன் இசையில் வைரமுத்து வரிகளில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் ஆனது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘எந்த பக்கம்' பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உதவி
கொரோனா வைரஸ் பரவுவதை கண்டு வேதனை கொண்ட கவிஞர் வைரமுத்து, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ஒரு பாடலை முதன் முதலாக உருவாக்கினார். பின்னர், கொரோனா குறித்த பல கவிதைகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மே 22ம் தேதி பெசன்ட் நகரில் 500 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் வழங்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் படங்களுக்கு தொடர்ந்து பல பாடல்களை எழுதி வந்த வைரமுத்து, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி சின்மயி, வைரமுத்து மீது தொடர்ந்து கொடுத்து வந்த மீடூ புகார் தான் அதற்கு காரணம் என்ற தகவல்கள் பரவினாலும், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











