"எழுத்து வைரமுத்து.. இசை இளையராஜா.. குரல் ஜேசுதாஸ்".. இது வேறமாறி அட்டாக்கா இருக்கே பாஸ்!
சென்னை: ஒரு பாடல் என்பது இசை மற்றும் மொழி கலந்த கலவைதான் என தொடர்ந்து வைரமுத்து வலியுறுத்தி வருகிறார். இசை மட்டுமே பெரியது என நினைப்பது மிகப்பெரிய தவறு என்பது இளையராஜாவுக்கு உணர்த்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார் வைரமுத்து.
கல்வியா? செல்வமா? வீரமா? என சரஸ்வதி சபதமே நடப்பது போல வைரமுத்து மற்றும் இளையராஜா பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியது இளையராஜாவின் குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

வைரமுத்து சொன்ன கருத்து இளையராஜாவுக்கு எதிரான கருத்து தான் என்பதை நினைத்த கங்கை அமரன் வெளியிட்ட வீடியோ ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
வைரமுத்து பேச்சு: பாடல் வரிகள் பெரியதா? பாடலின் இசை பெரியதா? என்கிற கேள்வி தற்போது தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்து வருகிறது எனக் கூறிய வைரமுத்து மொழியும், இசையும் கலந்தது தான் ஒரு சிறந்த பாடல். சில நேரங்களில் மொழி இசையை விட பெரியதாக இருக்கும். சில நேரங்களில் மொழியை விட இசை பெரியதாக இருக்கும். இதை அறிந்தவன் ஞானி, அறியாதவன் அஞ்ஞானி என பேசி விட்டார்.
கங்கை அமரன் மிரட்டல்: இன்னொரு தடவை என் அண்ணன் இளையராஜா பற்றியோ அவருடைய இசை பற்றியோ பேசினால் நடப்பதே வேறு என்றும் வாயை மூடிக் கொண்டு வைரமுத்து இருக்க வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார் கங்கை அமரன். மேலும், தங்களால் தான் வைரமுத்து வளர்ந்தார் என்றும் அந்த நன்றி விசுவாசம் கொஞ்சமும் இல்லாமல் பேசுவது சரியா? என கேட்டுள்ளார். கங்கை அமரனின் பேச்சு ஏற்புடையதல்ல என்றும் வைரமுத்துவை இப்படி நேரடியாக தாக்கி பேசியிருக்கக் கூடாது என சினிமா பிரபலங்களே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உழைப்பாளர் தின வாழ்த்து: இந்நிலையில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வைரமுத்து பதிவிட்டுள்ள ட்வீட்டிலும் அழுத்தம் திருத்தமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்குவது போல பதிவை போட்டிருக்கிறார்.
"உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை
எழுத்து வைரமுத்து
இசை இளையராஜா
குரல் ஜேசுதாஸ்
இந்தப் பாட்டு
இந்த மூவருக்கு மட்டுமல்ல
உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம்" என ஒரு பாடலை இசையமைத்தவர் மட்டுமே சொந்தம் கொண்டாடி விட முடியாது என்பதை குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
சரியான பதிலடி: கங்கை அமரன் போல வீடியோ வெளியிட்டு பதிலுக்கு பதில் சண்டை போடுவதில் எந்தவொரு பயனும் இல்லை என்பதை புரிந்துக் கொண்டு திரும்ப திரும்ப இசையமைத்தவருக்கே பாடல் சொந்தம் என்கிற காப்புரிமைக்கு எதிரான தனது வாதத்தை அழுத்தம் திருத்தமாக வைத்து வைரமுத்து பதிலடி கொடுத்து வருகிறார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு இந்த அட்டாக்கை எதிர்பார்க்கல பாஸ் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











