சம்பளத்தில் 80 சதவீதத்தை கருப்புப் பணமாக வாங்குகின்றாரா யோகி பாபு? புதுசா கிளப்பி விடும் பிஸ்மி!
சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடியூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக இவர்கள் மூவரும் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி பாபு குறிப்பிட்டார். யோகி பாபு பேட்டியில், வலைப் பேச்சு என்ற வார்த்தையையோ அல்லது அவர்களது பெயர்களையோ குறிப்பிடவில்லை. ஆனால் யோகி பாபுவின் பேச்சு, வலைபேச்சு யூடியூப் தளத்தினைத் தான் குறிக்கின்றது என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், வலை பேச்சு யூடியூப் தளத்தில் யோகி பாபுவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், பல வருடங்களுக்கு முன்னர் யோகி பாபு படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ஒருவரைத் தொட, அந்த நடிகரோ 'டோன்ட் டச்' எனக் கூறிவிட்டதாகவும், இதனால் யோகி பாபு மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானதாகவும் கூறினர். மேலும், இந்த சம்பவத்தை நடிகர் யோகி பாபுதான் தங்களிடம் மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார் எனவும் பிஸ்மி கூறினார்.

இந்நிலையில் இன்றைய வீடியோவில், யோகி பாபுவிடம் டோன்ட் டச் எனக் கூறியது நடிகர் அஜித்குமார் என்றும், நடிகர் யோகி பாபு தான் இந்த விஷயத்தை எங்களிடம் கூறினார் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஊடக அறத்தினால்தான், நாங்கள் யோகி பாபுதான் இந்த விஷயத்தை எங்களிடம் கூறியதாக குறிப்பிடவில்லை எனவும் பிஸ்மி பேசுகின்றார். இவர்களின் இந்த பேச்சு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார், யோகி பாபுவிடம் தீண்டாமையைக் கடைபிடித்தாரா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சத்தியம்: மேலும் அந்த வீடியோவில், " யோகி பாபுவிடம் நாங்கள் பணம் கேட்டதாக கூறுகின்றார். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்கவில்லை என யோகி பாபு நம்பக்கூடிய திருத்தனி முருகன் கோவிலுக்கு வந்து சத்தியம் செய்கின்றோம். அவரையும் வரச்சொல்லுங்கள். வரும்போது அவரது குழந்தையையும் கூட்டி வரச் சொல்லுங்கள். நாங்களும் எங்களது குழந்தைகளைக் கூட்டி வருகின்றோம். இதையெல்லாம் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியலாம்.

பதிலடி: ஆனால் எங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு நாங்கள் கட்டாயம் பதில் கொடுத்தே ஆகவேண்டும். திருத்தனி முருகன் கோவிலுக்கு வந்தாலும் சரி, பழனி முருகன் கோவிலுக்கு வந்தாலும் சரி, சத்தியம் செய்ய நாங்கள் தயார். மேலும் நாங்கள் கையேந்த வேண்டும் என்றால், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோரிடம் கூட கேட்டுக் கொள்வோம், இவரைப் போன்றவரிடமா கேட்போம்" எனவும் அந்தணன் குறிப்பிடுகின்றார். இது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கருப்புப் பணம்: அதே வீடியோவில், பிஸ்மி பேசுகையில், " யோகி பாபு ஒரு நாளை ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், அதில் 5 லட்ச ரூபாயை மட்டும் வருமானக் கணக்கில் கொண்டு வருவதாகவும், மீதம் உள்ள ரூபாய் 20 லட்சத்தை கருப்புப் பணமாக வாங்கிக் கொள்கின்றார் என பிஸ்மி குறிப்பிடுகின்றார். தொடர்ந்து பேசும் அவர், இவையெல்லாம் நமக்குத் தெரியும், ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லி அவரது தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என நாம் இருந்தோம்" என பேசியுள்ளார். பிஸ்மியின் இந்தப் பேச்சு, டிஜிட்டல் இந்தியாவில் கருப்புப் பணமா எனவும் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பொய்: மேலும் அவர், "பொய்யை கொஞ்சமும் கூசாமல் உண்மைபோல் பேசும் யோகி பாபு கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசுங்கள். தமிழ் சினிமா பல நேரங்களில் திறமை சாலிகளை கோபுரத்தில் உட்காரவைக்கும், பல நேரங்களில் குப்பைகளை உட்கார வைக்கும். அப்படிப்பட்ட குப்பைதான் யோகிபாபு" எனவும் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு யோகி பாபுவைச் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











