அரசியல் களத்திற்கு தயாராகிறாரா நடிகர் விஜய்.. வலைப்பேச்சு பிஸ்மி சொல்வது என்ன?
சென்னை : நடிகர் விஜய்யின் அரசியலுக்கு எப்போது வருவார் என்று கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பேச்சு நிலவி வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாகி உள்ளன.
10ம் வகுப்பு,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்யின் திட்டம் அவரது அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கு வலுசேர்த்துள்ளது.

வலைப்பேச்சு பிஸ்மி : இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய்யின் அரசியல் நகர்வு வேகம் அடைந்துள்ளதைத் தான் காட்டுகிறது. ஆனால், இவை எல்லாம் தன்னை முதலமைச்சராக்கி விடும் என்று விஜய் நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு இல்லை என்பது என்னுடைய கருத்து.
நலத்திட்ட உதவி : மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கொடுப்பது, இலவச நோட்டு புத்தகம் கொடுப்பது என பல நலத்திட்டங்களை செய்து கொண்டு தன்னை ஒரு சமூகசேவராக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால்,கடந்த காலத்தில் இதைவிட பல நலத்திட்டங்களை பல நடிகர்கள் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அரசியலில் ஒதுங்குவதற்கு கூட இடம் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.

கடைசிப்படமா : அதே போல நடிகர் விஜய் தனது 70வது படத்தோடு சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்றும் 70வது படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார். இந்த படம் தான் விஜய்யின் அரசியல் வருகைக்கான நகர்வாக இருக்கும் என்று சமூகவலைத்தளத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த வதந்தியை கேட்கும் போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
வாய்ப்பே இல்லை : தற்போது விஜய்யின் சம்பளம் 200 கோடி ரூபாய், கடந்த சில வருடத்திற்கு முன் அவரின் சம்பளம் 120 கோடியாக இருந்தது. தற்போது, 200 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இனி வரும் காலத்தில் ஆண்டுக்கு இரண்டு படம் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால், அவரின் ஆண்டு வருமானம் 400 கோடியாக உள்ளது. இந்த வருமானத்தை விட்டு விட்டு விஜய் எப்படி அரசியலுக்கு வருவார். இதனால் விஜய்யை பொறுத்தவரை சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு வரவாய்ப்பே இல்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











