பால்கனியில் விழுந்த குழந்தை..ஏன் இறந்தார் ரம்யா? சோஷியல் மீடியாவால் நடந்த கொடுமை!
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த தாய் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவின் மனிதாபிமானமற்ற பேச்சுதான் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் ரம்யா. ஐடி ஊழியரான இவர், வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இவர்களது 7 மாத கைக்குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகள் பல முயற்சிகளை செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

தற்கொலை: இதனையடுத்து, குழந்தையின் தாயை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால், குழந்தையின் தாய் ரம்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரம்யா அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் தங்கள் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடைக்கு வந்துள்ளார். அங்கு கடந்த சில வாரங்களாக குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திட்டி தீர்த்த மீடியா: இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த குழந்தையை காப்பாற்றிய பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சோஷியல் மீடியா என அனைவருமே குழந்தை பிழைத்து விட்டது என்ற சந்தோஷத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, அந்த குழந்தையின் அம்மாவை குறை சொல்ல தொடங்கி விட்டார்கள். நீ எல்லாம் ஒரு தாயா, குழந்தை இல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள், குழந்தையை பார்த்துக்கொள்ளக் கூட தெரியாதா என வசமாக ஒருத்தி சிக்கிவிட்டதால், அனைவரும் தாயுமானவராக மாறி அந்த அம்மாவை வசைபாடினார்கள். ஒரு தாய் எப்படி தனது குழந்தையை தூக்கி போடுவாள் என்கிற எண்ணம் கூட இல்லாமல், அந்த பெண்ணை மோசமான வார்த்தையால் விமர்சித்தனர்.
மன அழுத்தத்தில்: யாரோ முகம் தெரியாதவர்களே இப்படி வசைப்பாடும் போது, அந்த பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் எப்படி பேசி இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி அந்த பெண் இத்தனை நாட்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதே மிகப்பெரிய விஷயம் தான். இதனால், மன அழுத்தத்திற்கு சென்ற ரம்யாவின் மனநிலையை புரிந்து கொண்டு அவரது கணவர், கவுன்சிலிங் கொடுத்து, அவரை தேற்றி உள்ளார். ஆனால், ரம்யாவால், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல், தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததால், அவரது கணவர் அவரை அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தணன் வேதனை: ஆனால், சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தியில் இருந்த மீள முடியாத ரம்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது இந்த இரண்டு குழந்தைகளும் அம்மாவை இழந்து அனாதையாக இருக்கின்றனர். எவ்வளவு கனவோடு அந்த பெண் அந்த குழந்தையை பெற்று இருப்பார் என்று வலைப்பேச்சு அந்தணன் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











