Bala: பாலாவின் கடைசி ஆசை.. நான் இறந்ததற்குப் பிறகு எனது உடலை.. கைகளை பிடித்துக் கொண்டு பாலா கண்ணீர்
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. படத்தில் அருண் விஜய் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல், அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ரிதா நடித்துள்ளார். படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பாலா 25 நிகழ்ச்சியையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடு செய்தார். இதில் கலந்து கொண்ட எழுத்தாளரும், கதை சொல்லியும் நடிகருமான பவா செல்லத்துரை பகிர்ந்து கொண்ட விஷயம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பொதுவாகவே பாலா ரொம்பவும் வித்தியாசமான மனிதர். தனது எண்ண ஓட்டங்களை படங்களாக மாற்றி அதனை மக்களிடம் சமர்ப்பித்து மக்களின் மனதிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியவர். பாலாவைப் பொறுத்தவரையில் தனது திரைமொழியில் கூட, பெரும்பான்மையான வணிக நோக்க சினிமா மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இவரது இயக்கத்தில் இதுவரை வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் அவருக்கு முன்னரும் பின்னரும் இன்னும் தமிழ் சினிமாவில் யாரும் தொடாத மனிதர்களின் வாழ்க்கையைத்தான் படங்களாக எடுத்துள்ளார்.

பாலா மறைந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான பாலு மகேந்திராவின் சிஷ்யன். அவரிடம் இருந்து சிஷ்யர்களாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள அனைவரது திரைமொழியும் சினிமாக்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலு மகேந்திராவின் சிஷ்யர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அவருடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்கள். அப்படி பாலு மகேந்திரா குறித்தும் தனது கடைசி காலங்கள் குறித்தும் பாலா தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.
பாலு மகேந்திரா: வம்சி பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தினை நடத்தி வருபவர்கள் பவா செல்லத்துறை மற்றும் அவரது மனைவி ஷைலஜா. இவர்கள் இருவரும் எழுத்தாளர்களும் கூட. மேலும் இதில் பவா செல்லத்துரை நடிகராகவும் கதை சொல்லியாகவும் உள்ளார். மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். பாலு மகேந்திராவின் கல்லறை இவர்களுக்குச் சொந்தமான பத்தாயத்தில் உள்ளது.
சமாதி: அதாவது இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு சமாதி எழுப்பியுள்ளார்கள். பத்தாயத்திற்குச் செல்லுபவர்கள், பாலு மகேந்திராவின் சமாதியைப் பார்த்துவிட்டு வருவார்கள். ஒருமுறை பாலு மகேந்திராவின் சமாதியைப் பார்க்கச் சென்ற, இயக்குநர் பாலா, கண்களில் கண்ணீர் ததும்ப தனது கடைசி ஆசை குறித்து கூறியுள்ளார்.
கடைசி ஆசை: அதாவது, ஷைலஜாவின் கரங்களைப் பிடித்துக் கொண்ட பாலா, நான் மட்டும் எங்கே போய்விடுவேன். எனது அப்பாவே இங்கதானே இருக்கின்றார்? நானும் அவருக்குப் பக்கத்தில்தானே இருக்கவேண்டும். நான் இறந்த பின்னர் என்னையும் இங்கே கொண்டு வந்து புதைத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பவா செல்லத்துரை கூறியதைக் கேட்டு, பாலாவின் ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











