Suriya: வணங்கான் பட போஸ்டரை சூர்யா வீட்டு வீதியில் ஒட்டவேண்டாம்னு சொன்ன பாலா.. சுரேஷ் காமாட்சி ஓபன்!
சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் கமிட் ஆனவர் சூர்யா. அதன் பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதன் பின்னர் அந்தப் படத்தில் அருண் விஜய் நடித்தார். வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகவும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்தார். இது திரையுலகில் பெரும் கவனம் பெற்றது.
சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வணங்கான் படத்தில் பணியாற்றும்போதுதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், சூர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. பாலா இயக்கத்தில் சூர்யா இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் படம் நந்தா. இந்தப் படம் சூர்யாவின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. அந்தப் படத்தைப் பார்த்த பின்னர்தான், சூர்யாவை காக்க காக்க படத்தில் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் அழைத்ததாக பாலா 25 விழாவில் சூர்யா சொன்னார்.

அதேபோல் மற்றொரு படம், பிதாமகன். இந்த இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதிலும் பாலா 25இல் கலந்து கொண்ட சிவக்குமார் நந்தா படம் குறித்தும், பிதாமகன் படம் குறித்தும் மிகவும் சிலாகித்துப் பேசினார். வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு தமிழ் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சுரேஷ் காமாட்சி: இப்படியான நிலையில், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பாலா 25 விழாவையும் ஒரு சேர நடத்த திட்டமிட்டு, அதை சாத்தியமாக்கியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இது தொடர்பாக அவர் பேசும்போது, " சூர்யா சாருக்கும் பாலா சாருக்கும் என்ன முரண் என எனக்குத் தெரியாது. எனக்கு அது அவசியமும் இல்லை. நான் சிவக்குமார் சாரைக் கூப்பிட்டு கேட்டபோது, நான் கட்டாயம் வருகின்றேன் எனக் கூறினார். அதேபோல், சூர்யா வருவானா எனத் தெரியாது எனவும் கூறினார்.

சூர்யா: அதன் பின்னர், சிவக்குமார் சாரே சூர்யா சாரிடம் இது தொடர்பாக பேசுகையில், சூர்யா சார் உடனே நான் இல்லாமல் எப்படி? நான் கட்டாயம் வருகின்றேன் எனக் கூறியுள்ளார். இதனை சிவக்குமார் சார் என்னிடம் கூறியபோது, சூர்யா சாரை சிவக்குமார் சார் எவ்வளவு சிறப்பாக வளர்த்துள்ளார் எனப் புரிந்துகொண்டேன்.

போஸ்டர்: பாலா முதலில் இந்த விழாவே வேண்டாம் எனக் கூறினார். நான் என்ன செய்துவிட்டேன், எனக்கு எதற்காக விழா என்றுதான் கேட்டார். ஆனால் இப்படிக் கேட்கும் ஒருவருக்கு, அவர் என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது என்பதற்காகவே இந்த விழாவை நடத்தினோம். இதுமட்டும் இல்லாமல், வணங்கான பட போஸ்டரை சூர்யா வீட்டு வீதிகளில், சாலைகளில் ஒட்டவேண்டாம் என பாலா சார் கூறினார். காரணம், எந்த ஒரு காரணத்திற்காகவும் வணங்கான் படத்தில் சூர்யாவால் நடிக்க முடியவில்லையே என வருத்தம் ஏற்பட்டுவிடக்கூடாது எனக் கூறினார். அப்போதுதான், சூர்யா சார் மீது பாலா சாருக்கு எவ்வளவு அன்பு உள்ளது என தெரிந்துகொள்ள முடிந்தது.



Click it and Unblock the Notifications











