மகன் விஜய்ஸ்ரீஹரியை அடித்தார் வனிதா! - நீதிபதியிடம் ஆகாஷ் புகார்

மகன் விஜய் ஸ்ரீஹரிக்காக நடிகர் ஆகாஷ், நடிகை வனிதா இருவரும் நீதிமன்றம் மூலம் மோதி வருகிறார்கள்.
விவாகரத்துக்குப் பிறகு, குடும்பநல நீதிமன்ற உத்தரவுப்படி மகனை வளர்ப்பதற்கான உரிமை வனிதாவிடமே உள்ளது. மகனை, ஆகாஷ் வந்து பார்த்து செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே எழுந்த குடும்பச் சண்டையின் காரணமாக ஆகாஷிடம் விஜய்ஸ்ரீஹரி சில மாதங்களுக்கு முன்பு விடப்பட்டான். அதன் பிறகு அவன் வனிதாவிடம் வரவேயில்லை.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். வனிதாவிடம், விஜய்ஸ்ரீஹரியை விட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தாயாருடன் செல்ல விஜய்ஸ்ரீஹரி மறுப்பதாகக் கூறி அகாஷ் அவனை அனுப்ப மறுத்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரிக்கிறார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி அறையில் விஜய்ஸ்ரீஹரியை வனிதா சந்தித்து பேசுவதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். 20 நிமிட சந்திப்புக்கு பின்னர் விஜய்ஸ்ரீஹரி அழுதபடி வந்தான்.
இந்த நிலையில் கோர்ட்டில் ஆகாஷ் தரப்பில் வக்கீல் ஆஜராகி, வனிதா மீது புகார் தெரிவித்தார். தனி அறையில் நடந்த சந்திப்பின்போது விஜய்ஸ்ரீஹரியை, வனிதா அடித்ததாக அவர் கூறினார். மேலும் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதி, "இந்த விவகாரம் பற்றி மனோதத்துவ நிபுணர்களிடம் பேசி இருக்கிறேன். 2 கோணத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். ஒன்று, விஜய்ஸ்ரீஹரியை வனிதா கொடுமைப்படுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வனிதா கொடுமைப்படுத்துவதாக ஆகாஷ் தரப்பில் விஜய்ஸ்ரீஹரியை கூற வைத்திருக்க வேண்டும். எனக்கு ஆகாஷ், வனிதா பற்றி கவலை இல்லை. விஜய்ஸ்ரீஹரியின் நலன் பற்றிதான் நான் யோசித்து வருகிறேன்' என்றார். மேலும் இந்த வழக்கு விசாரணையை 3-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











