Bigg Boss 7 - ரெட் கார்டுக்கு சப்போர்ட்.. நைட் 1 மணிக்கு பிரதீப் ஆள் என்னை தாக்கினார்.. வனிதா குற்றச்சாட்டு
சென்னை: Vanitha Vijayakumar (வனிதா விஜயகுமார்) பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்ட் எண்ட்ரி மூலம் ஐந்து பேர் வீட்டுக்குள் சென்றனர். மொத்தம் 23 பேரில் பவா செல்லதுரை தானாக வெளியேறினார். தொடர்ந்து அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு, ஆர்.ஜே.ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டனர்.

ரெட் கார்டு: மேலும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனிலேயே பிரதீப்தான் ஹாட் டாபிக்காக இருந்தார். வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்து வியூகங்கள் வகுத்து விளையாடிய அவர் கண்டிப்பாக டைட்டில் வின்னராக மாறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி வெளியே அனுப்பப்பட்டார்.
எதிர்ப்பு: பிரதீப்பை அப்படி அனுப்பதியதற்கு பலரும் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். முக்கியமாக கமல் ஹாசனுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தன. இருந்தாலும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரிதான் என ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க மீண்டும் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டுக்குள் வரலாம் என தகவல் பரவியது.
வாய்ப்பு இல்லை: ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் கமல் ஹாசன் பேசியபோது பிரதீப் மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பது உறுதியானது. அதேசமயம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் இரண்டு பேர் வீட்டுக்குள் வரவிருக்கின்றனர். அவர்கள் அனேகமாக விஜய் வர்மா மற்றும் அனன்யாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வனிதா மீது தாக்குதல்: இந்நிலையில், தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டார் என்று வனிதா விஜயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தன் காயமடைந்த புகைப்படத்தோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”நான் செய்யும் பிக்பாஸ் விமர்சனத்தையும், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை என் தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தியிருந்தேன்.
பிரதீப்பின் ஆதரவாளர்: காரை எடுப்பதற்காக அருகே சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்தார். அவர் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர். வந்தவர் என்னை கடுமையாக தாக்க தொடங்கினார். மேலும், ரெட் கார்டு கொடுக்குறீங்களா; நீ அதுக்கு வேற சப்போர்ட் என கூறி முகத்தில் அடித்தார். வலியில் நான் கத்தினேன். எனது முகத்தில் ரத்தம் வழிந்தது. இது நடக்கும்போது இரவு 1 மணி. அப்போது அங்கு யாருமே இல்லை.
நான் எனது தங்கையை கீழே அழைத்தேன். இதை உடனடியாக காவல் நிலையத்தில் சொல்லும்படி கூறினாள்.ஆனால் நான் இதில் நம்பிக்கை இழந்துவிட்டேன். பின்னர் முதலுதவி எடுத்துக்கொண்டேன். என்னை தாக்கியவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. என்னை அடித்துவிட்டு அவர் என்னை பார்த்து சிரித்தார். அடுத்த சில நாட்களுக்கு நான் ஆன் ஸ்க்ரீனில் வரப்போவதில்லை” என குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











