விஜயைப் பார்த்து கொசு அடுச்சாங்க.. விஜய் சேதுபதி பையன் தளபதி மாதிரி வருவாரு.. வனிதா விஜயகுமார் பளீச்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் மிஸ்டர் & மிஸஸ். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். நாளை அதாவது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் சிறப்புக் காட்சி இன்று திரையிடப்பட்டது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், " எனக்கு அழுகையும் வருகிறது, அழக்கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்த படம் நாளை வெளியாகி மக்கள் அதற்கு என்ன மாதிரியான வரவேற்பு கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் தான் நான் இப்போது உள்ளேன். அப்படி இருக்கும்போது, கேப்டன் ஆஃப் த ஷிப்பாக நான் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் நான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறேன்.
ஜோவிகாவை பல நல்ல படங்களில் நடிக்க கதை சொல்லிக் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால், இப்போது அவரிடத்தில் வரும் கதைகள் எல்லாம், ஜோவிகா இரண்டாவதாக, மூன்றாவதாக நடிக்க வேண்டிய படங்கள். ஆனால் எனக்கு எனது மகளை, மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான படத்தில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

விஜய் சேதுபதி மகன்: விஜய் சேதுபதி மகன் சூர்யா குறித்து பலரும் பலவிதமாக விமர்சித்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். நான் விஜய் உடன் இணைந்து சந்திரலேகா படத்தில் நடித்த காலத்தில் விஜய்யின் ஏதோ ஒரு படம் ரிலீஸ் ஆகி இருந்தது. நாங்கள் தியேட்டருக்கு சென்றோம். அப்போது விஜய்யை பார்த்து, அவரது முகத்தை பார்த்து கொசு அடித்தார்கள். அதை நானே நேரடியாக பார்த்து உள்ளேன். அப்போது எங்களுடன் விஜய்யும் உள்ளார். இது விஜய்க்கும் நன்றாக தெரியும்.
விஜய் சேதுபதியை விட: அப்படி இருந்த விஜய் தனது கடின உழைப்பால், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை கடந்து உழைத்து, ஓடி, இன்றைக்கு தளபதியாக, மக்களுக்குப் பிடித்தவராக, நாளைக்கு அவர்தான் முதலமைச்சர் எனக் கூறும் ஒரு கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அன்பு வைத்து விட்டால் போதும். விஜய் சேதுபதி மகனும் நன்றாக கடினமாக உழைத்தால் விஜய் மாதிரி அவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. சூர்யாவுக்கு நான் சொல்வதும் அது தான். நன்றாக உழைத்தால் விஜய் சேதுபதியை விடவும் பெரிய நடிகராக வருவார்.
த்ரிஷா நயன்தாரா: இதுதான் ஜோவிகாவுக்கும். நயன்தாரா, த்ரிஷா வந்த புதிதில் அனைவரும் அனைவரையும் விமர்சித்து தான் உள்ளோம். அவர்களது பழைய படங்களைப் பார்த்தால் என்ன இப்படி இருக்கிறார்கள் என்று தோன்றும். எல்லோருமே வளரட்டும். ஒரு வெற்றிக்குப் பின்னால் இன்னொரு வெற்றி. அப்போதுதான் அனைவருக்கும் இயல்பாகவே அறிவு முதிர்ச்சி வரும்" என்று பேசியுள்ளார். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு உண்டான வேலைகளை வனிதா விஜயகுமார் தீவிரமாக செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











