மற்றொரு மாமன்னன்.. அமைச்சர் நாற்காலியை அலங்கரித்த விசிக வன்னியரசு.. ஃபுல் கூஸ்பம்ஸ்!
சென்னை: சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டு இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கிய போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில், விஜய்க்கு அனுபவம் இல்லை, கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, அரசியல் தெரியாத சினிமா கூட்டம் உள்ளிட்ட விமர்சனங்கள் தான் அதிகம் முன் வைக்கப்பட்டது. அதுவும் இன்றைக்கு முதலமைச்சராக உள்ள விஜய் தனது அரசியல் மேடைகளில் தனது ரசிகர்களை அரசியல் வயப்படுத்தும் வகையில் பேசிடாதது உள்ளபடி பலருக்கும் ஏமாற்றம் தான். அப்படி இருந்தாலும், தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளார்.
தான் முதலமைச்சராக உருவெடுத்தது மட்டும் இல்லாமல், தனது கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் கூட்டணி ஆட்சி என்பதை நிறுவி வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். இதில் பலரது கவனத்தை ஈர்த்தது என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தான்.
தமிழ்நாடு மாமன்றத்தில் முன்னரே அலங்கரித்திருக்க வேண்டிய உறுப்பினர். கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த போது, வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினர், முதல் முறை அமைச்சர், அதுவும் விசிகவின் முதல் அமைச்சர் என பல வரலாறுகளுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.

வன்னியரசு: வன்னியரசை பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள், மாநில நலன், மாநில சுயாட்சி, சனாதன எதிர்ப்பு, தமிழ் தேசியம் என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிகத்திற்கு எதிராக குரல் கொடுத்து, காவல்துறையின் அடக்குமுறைகளைக்கு ஆளாகி அவற்றை எல்லாம் எதிர்த்து அரசியலில் களமாடியவர். பல நேரங்களில் காவல்துறை அதிகாரிகளால் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ளார். அண்மையில் அளித்த பேட்டியில், இலங்கையில் இருந்து திரும்பி தமிழ்நாடு வந்த பின்னர், யாசகம் பெற்று பசியாற்றியதை சொல்லி கலங்கினார்.
கூட்டணி ஆட்சி: திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறினாலும், தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக் கூடாது என்று திமுகவுடன் கூட்டணியில் விசிக பயணித்தது. தேர்தல் முடிவுகள் தவெக ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியது மட்டும் இல்லாமல், விசிக அமைச்சரவையில் இடம் பெறவும் வழிவகை செய்தது. தவெக பலமுறை வழிந்து கேட்டுக் கொண்டதால், விசிகவும் சரி எனச் சம்மதித்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்து விட்டு, தவெக அமைச்சரவையில் இடம்பெறும் விசிகவை மிகவும் மோசமாக திமுக இரண்டாம் நிலைத் தலைவர்கள் விமர்சித்தாலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினோ, கொள்கை தோழமைக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்: சாமானிய, விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக மக்கள் மன்றத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த குரல், முதல் முறையாக சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது, அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ஒரு மாமன்னனாக ஒலிக்கவுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் என்று தவெகவினரும் அமைச்சர் வன்னியரசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று சொல்லப்பட்டு வந்ததை எல்லாம் முதலமைச்சர் விஜய் நிஜத்திலும் சாத்தியப்படுத்தி வருகிறார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications