வந்தனா நீதிமன்றத்தில் சரண்
சென்னை:
ஸ்ரீகாந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற அவரது மனைவி வந்தனா, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சைதாப்பேட்டை நீதிதமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
காக்கிநாடாவில் வைத்து வந்தனாவை, ரகசியத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீகாந்த். ஊர், உலகத்திற்காக ஒரு திருமணத்தையும் இரு வீட்டாரும் இணைந்து அறிவித்தனர்.இந்த நிலையில்தான் வந்தனா குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் வந்தனாவிடமிருந்து பிரிய முடிவு செய்தார் ஸ்ரீகாந்த்.
ஆரம்பத்தில் பொறுமை காத்த வந்தனா, பின்னர் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் குடும்பத்தினல் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் வந்தனா, ஸ்ரீகாந்த்தின் முறைப்படியான மனைவி என்பதால் வெளியேற்ற முடியாது என்று கூறி விட்டது போலீஸ்.
இதையடுத்து தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வந்தனா உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் கோரினார். உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தனா சரணடைந்தார். பின்னர் அவர் சார்பில் இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்தனாவுக்கு நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.
வடபழனி காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என வந்தனாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











