கன்னி ராசியில் வரலட்சுமி குடும்ப குத்துவிளக்காக நடித்துள்ளார் - ரோபோ சங்கர்
சென்னை: கன்னிராசி படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முழுக்க முழுக்க ஒரு குடும்ப குத்துவிளக்காகவே நடித்துள்ளார் என்று நடிகர் ரோபோ நகைச்சுவையுடன் கூறினார். வரலட்சுமி ஆண் பிள்ளை மாதிரி தைரியமானவர் என்று படத்தின் ஹீரோ கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் திரையுலகில் வசூலில் சாதனை படைத்த படங்களின் டைட்டிலை வாங்கி அதற்கேற்றவாறு கதையை தயார்செய்வது ட்ரெண்டாகி வருகிறது. அதே தான் இந்த கன்னி ராசி படத்திலும் நடக்கிறது.

1980களின் மத்தியில் அறிமுக இயக்குநராக களம் கண்ட பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கன்னி ராசி. பிரபு, ரேவதி, கவுண்டமணி மற்றும் ஜனகராஜ் கூட்டணியில் படம் முழுவதும் காமெடியில் களை கட்டியிருக்கும். தற்போது அந்தப் படத்தின் டைட்டிலை வாங்கி நடிகர் விமலை வைத்து புதுக்கதை தயார் செய்துவிட்டார்கள்.
கதைப்படி கதாநாயகன் காதலித்து ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கொள்ளாமல், பெற்றோர் பார்த்து வைக்கும் குடும்ப குத்துவிளக்கையே கல்யாணம் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் நடு வழியில் விதி விளையாடி, காதல் குறுக்குவாட்டில் புகுந்து, பிறகு வழக்கம்போல் காமெடி, அடிதடி முடிவில் சுபமாகிறது.
சமீப காலமாக நடிகர் விமல் நடிப்பில் வெளியான எந்தப் படமும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான களவாணி 2ஆம் பாகமும் கூட முதல் பாகத்தைப் போல் இல்லை என்று பார்வையாளர்கள் குறைபட்டுக்கொண்டனர். இந்நிலையில் தான் விமல் நடிப்பில் கன்னி ராசி படம் வெளியாகவிருக்கிறது.
இயக்குனர் முத்துகுமாரன் எழுதி இயக்கிய கன்னி ராசி திரைப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாகவும், நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இயக்குநர் பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், சாம்ஸ், ஷகீலா, பி.வி.சந்திரமவுலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் ஷமீம் இப்ராஹிம் தயாரிக்கிறார். இது முற்றிலும் நகைச்சுவை திரைப்படமாக வரவிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக எஸ்.செல்வகுமார் மற்றும் படத் தொகுப்பாளராக ராஜா முகமது பணிபுரிகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பாடல்களையும் கவிஞர் யுகபாரதி எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடல் கொலு பாடலாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை சித்ரா பாடியுள்ளார். கவிஞர் யுகபாரதிக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்திற்கான பிரஸ் மீட் இன்று நடைபெற்றது, அதில் பங்கேற்று பேசிய நடிகர் விமல், வரலட்சுமி ஆண் பிள்ளை மாதிரி தைரியமானவர். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
ரோபோ சங்கர் பேசியபோது வரலட்சுமி சரத்குமார் முந்திய திரைப்படத்தில் எல்லாம் தைரியமான கதாபாத்திரமாக நடித்தார். இந்த திரைப்படத்தில் அதற்கு மாறாக ஒரு குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார் என்று நாகாய்ச்வை உடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











