Varalaxmi Marriage: குடும்பத்தோடு பிரதமரைச் சந்தித்த சரத்குமார்! வரலஷ்மி கல்யாணத்துக்கு அழைப்பு!
டெல்லி: தமிழ் சினிமாவில் தற்போது கல்யாண குஷியில் உள்ள நடிகை என்றால் அது நடிகர் சரத்குமாரின் மகள் வரலஷ்மி சரத்குமார்தான். சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கும் அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. குறிப்பாக வரலஷ்மியின் காதலர் நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்த கமெண்டுகளுக்கு தக்கபதிலடிகளையும் வரலஷ்மி சரத்குமார் கொடுத்துவந்தார்.
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வரலஷ்மி சரத்குமார். தொடர்ந்து தனது நடிப்புத் திறமையால் பக்கா வில்லி கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போகும் நடிகையாக வலம் வருகின்றார். விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் அட்டகாசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி வெர்டிக்ட்.

திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்த திட்டமிட்டு 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கும் வேலைகளில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளனர் சரத்குமார் குடும்பத்தினர். குறிப்பாக சரத்குமார் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் குடும்பத்துடன் சென்று திருமணத்திற்கு அழைப்பிதழைக் கொடுத்துவந்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களுக்கு அழைப்பிதழ்களைக் கொடுத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தனர்.

தாய்லாந்தில் திருமணம்: இவர்கள் மட்டும் இல்லாமல் மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் பத்திரிகை வைத்தனர். சமந்தா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி உள்ளிட்டவர்களையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தனர். வரலஷ்மி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது என செய்திகள் வெளியானது. ஆனால் சரத்குமாரின் எக்ஸ் பக்க பதிவில் சென்னையில் திருமண வரவேற்பு எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதால் திருமணம் தாய்லாந்தில் தான் நடைபெறவுள்ளது என்ற செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பிரதமருக்கு அழைப்பு: இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 28ஆம் தேதி நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் அவரது மகள் வரலஷ்மி சரத்குமார் மற்றும் வரலஷ்மி சரத்குமாரின் காதலர் நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு வரலஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுத்தனர். இது தொடர்பாக சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், " பாரத பிரதமர் நரேந்திரமோடிஜியை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அரசியல்: நானும், எனது மனைவி ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம்.

மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
சரத்குமாரின் குடும்பத்தாரின் அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி வரலஷ்மி சரத்குமாரின் திருமண வரவேற்பிற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











