விஜய்யின் மதுரை மாநாட்டிலேயே மனம் பதறியது.. கரூர் துயர சம்பவம்.. இயக்குநர் வேதனை
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் வாராவாரம் சனிக்கிழமை தனது தொண்டர்களை சந்திக்கிறார். அந்தவகையில் நேற்று கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கரூரில் கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் கரூருக்கு விரைந்தனர்.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய்க்கு நேற்றைய நாள் கருப்பு நாள்தான். வாரா வாரம் சனிக்கிழமை மட்டும் தனது தொண்டர்களை சந்தித்து அரசியல் செய்யும் அவர்; நேற்று கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் சந்திப்பை நடத்தினார். வழக்கம்போல் பேருந்தில் நின்றபடி எக்குத்தப்பான கூட்டத்துக்கு முன்பு சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
விரைந்த முதலமைச்சர்: இந்த துயர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை உண்டு செய்திருக்கிறது. பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவே கரூருக்கு முதலமைச்சர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். விஜய்யோ சம்பவத்தை கேள்விப்பட்டும் திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் செய்தியாளர்களிடம் பேசி ஒரு இரங்கல்கூட தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.

போன விஜய்; வந்த ட்வீட்: அவர் சென்னைக்கு தனது வீட்டுக்கு போனதும் எக்ஸ் பக்கத்தில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என ட்வீட்டை மட்டும் போட்டிருக்கிறார்.
வசந்தபாலன் போஸ்ட்: இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் இத்துயர சம்பவம் பற்றி தனது முகநூல் பக்கத்தில், "இந்தியா முழுக்க கூட்ட மேலாண்மையில் நாம் மிகவும் அக்கறையின்றி மிக அலட்சியமாக செயல்படுகிறோம்.பொது நிகழ்வுகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களில் வருடாவருடம் பெரும் மனித இழப்புகளை சந்திக்கிறோம்.மதுரையில் மாநாடு நடந்த போதே மனது பதறியவண்ணம் இருந்தது. கரூர் சம்பவத்தைக் கேட்டதுமே பெரும் கவலையை அளிக்கிறது.சொல்ல வார்த்தைகள் இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
குழந்தைகளுடன் பெற்றோர்கள் கூட்டத்திற்குச் செல்லும் மனநிலை மிகவும் கண்டிக்கத்தக்கது. கூட்ட மேலாண்மையை இந்தியா முதல் பாடமாக கற்க வேண்டும். கடுமையான போக்குவரத்து விதிகள் போன்று கூட்ட மேலாண்மை விதிகள் திருத்தப்பட்டு மிக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் இந்தியாவில் இன்னொரு கூட்ட நெரிசல் மரணங்கள் ஏற்படாமல் தடுக்கவேண்டும்" என வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











