உங்க பெண்ணை அந்த ஜாதி பையனுக்கு கட்டி வைப்பீங்களா? நீயா நானா கோபிநாத்திற்கு சவால் விட்ட சங்கத் தமிழன்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நீயா நானா நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்புகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த வாரம் அதாவது, ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கிராமத்து பெண்கள் மற்றும் கிராமத்து தாய்மார்களுக்கு இடையிலான விவாதம் நடைபெற்றது. இதில் நகரத்து மாப்பிள்ளைகள் வேண்டும் என இளம் பெண்கள் பேச, கிராமத்து மாமியார்கள் நாசூக்காக நடந்து கொள்வார்கள் என கிராமத்து தாய்மார்கள் பேசினார்கள். அதில் ஒருவர் மட்டும் தனித்து தெரிந்தார். அவர், தேனியில் இருந்து கலந்து கொண்ட அருணா என்ற இளம் பெண்.
இவர் பேசுகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருப்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் ஏதோ ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் எஸ்.சி சமூகத்தில் இருக்கும் ஆணையோ, பெண்ணையோ இந்த சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை எனக் கூறினார். அதன் பின்னர் நகர்ந்த வாதத்தை அடுத்து இளம் பெண்களை நோக்கி நிகழ்ச்சித் தொகுப்பாளார் கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதாவது, யாரெல்லாம் எஸ்.சி. ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இளம் பெண்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் கூட கையைத் தூக்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பளார் கேள்விகள்: அப்போது அந்த இளம் பெண்களை நோக்கி கோபிநாத் பேசும் போது, " கிராமத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என நினைக்கும் நீங்கள், ஏன் சாதியில் இருந்து வெளியே வர மாட்டேன் என்கிறீர்கள். திருமணம் உங்களின் தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் அனைவரின் எண்ணமாக உள்ளது. கிராமத்தில் இருப்பவர்களிடம் நாகரிகம் இல்லை பிற்போக்குவாதிகள் என்று சொன்னீர்கள். நீங்கள் எல்லாம் யார்? சிறுவயதில் இருந்து காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இந்த ஆடையை தான் போட வேண்டும். மாமியார் பேச்சைக் கேட்க வேண்டும். போற இடத்தில் என் பேரைக் காப்பாற்றனும். அவர்கள் முன்ன பின்ன இருந்தாலும் அனுசரித்து போக வேண்டும் என்று சொன்ன அனைத்தையும் உடைத்தாச்சுல. அப்படி இருக்கும்போது சாதியை மட்டும் ஏன் உடைக்க கூடாது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நீங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இதே சிந்தனையில் இருந்தால், நகரம் என்ன கிராமம் என்ன? எல்லாம் ஒன்று தானே? எனறு கேள்வியும் எழுப்பினார். இந்த நிகழ்ச்சியின் இந்த பகுதி மட்டும் இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் கோபிநாத்தின் கேள்விகளைப் பாராட்டினார்கள்.

சாதி பிரச்னை: அருணா பேசும்போது, சாதியால் சந்திக்கும் பிரச்னை என்பது எனக்கு இன்றைக்கு புதிதாக நடக்கவில்லை. சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். அதனால் நான் இது போன்ற சம்பவங்களை மனிதர்களை எதிர்கொள்ளும்போது நான் சிரித்துவிட்டு நகர்ந்து விடுவேன் என்று தனது வலியை எளிமையான வார்த்தைகள் மூலம் எடுத்து வைத்தார். அருணா முதலில் பேசும் போது அவரைப் போன்ற ஒரு பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த பெண் ஒருவர், அருணா பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றதும், பின் வாங்கினார். குறிப்பாக கணவரைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் காரணம் சொன்னார். ஆனால் அருணா இதற்கு மிகவும் எளிமையாக பதிலளித்தார்.

சங்கத்தமிழன்: இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை, அதிர்ச்சியை, அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் இந்த நிகழ்ச்சி தொடர்பாக அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்திற்கு சவால் விட்டுள்ளார்.
சவால்: இந்த நிகழ்ச்சி தொடர்பாக சங்கத் தமிழன் அளித்த பேட்டியில், " நீயா நானா நிகழ்ச்சி நடத்தியது பாராட்டுக்குரியதுதான். காதலிக்கு சாதி, மதம், மொழி, இனம் என எதுவும் இல்லை. படித்த ஆண் மகனாகவோ, படித்த பெண்ணாகவோ இருந்தால் பிரச்னை இருக்காது. ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார் கோபிநாத். ஒரு பெண் பேசும்போது படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ அல்லது உயர் பொறுப்புகளில் இருந்தால் பிரச்னை இல்லை என்று கூறும்போது, ஒரு மனிதனை மனிதனாக மதியுங்கள் என்கிறார் கோபிநாத். ஆனால் அவையெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். நான் கோபிநாத்திற்கு சவால் விடுகிறேன். ' கோபிநாத் அவர்களே உங்கள் குடும்பத்தில் யாராவது தலித்தை காதலித்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா?

டி.ஆர்.பி: இங்கு பிரச்னையே சமூகம் தான். தனிமனிதர்கள் ஒழுக்கமானவர்களாக, கோபிநாத் போன்று இருக்கலாம். கோபிநாத் அவர்களே நீங்கள் ஆசைப்பட்டு தனது மகனுக்கோ, மகளுக்கோ தலித் சமூகத்தில் திருமணம் செய்து வைப்பீர்களா? உங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஓட வேண்டும் என்பதற்காக ஏட்டிக்குப் போட்டியாக கேள்வி கேட்கிறார் கோபிநாத். ஆனால் கோபிநாத் அப்படி நடந்து கொள்வாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கேள்வி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சவாலுக்கு பதில்: தொடர்ந்து அவர் பேசும்போது, நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசும்போது சிறப்பாக பேசினார். ஆனால் கோபிநாத் அதற்கு அறிவிப்பூர்வமாக பேசுவதைப் போல பேசுகிறார். இவ்வளவு பேசும் கோபிநாத் எனது சவாலுக்கு பதில் அளிப்பாரா என்று கேள்வியும் கேட்டுள்ளார். அந்த பெண் பேசும்போது எஸ்.சி வகுப்பிலேயே மூன்று சாதியினர் உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் எஸ்.டி , எஸ்.சி.ஏ உள்ளார்கள் பாகுபாடுகள் அவர்களுக்குள்ளும் உள்ளது என்று கூறுகிறார். அது உண்மைதான். அப்படி யாரும் பாகுபாடு பார்க்காமல், மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்" என்று பேசினார். சங்கத் தமிழன் தனது பேட்டியில் நீயா நானா நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்திற்கு சவால் விட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், கோபிநாத் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











