Vedan: நெஞ்சில் ‘அ'.. பச்சை குத்தியதற்கு காரணம் அம்மா மட்டுமில்லை.. வேடன் சொன்ன 7 காரணங்கள்!
கொச்சி: வேடன்.. வேடன்.. வேடன்.. கடந்த சில வாரமாகவே இந்த பெயர் இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. ராப் பாடகரான இவரது பாடல்கள் தொடர்பான வீடியோக்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடன், மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டிலும் தனது ராப் பாடல்களை அமைத்து வருகிறார். இப்படி இருக்கும்போது, இணையவாசிகள் பலரும் வேடனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் வேடன் தனது நெஞ்சில் தமிழின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார். அது ஏன் என்பது குறித்து அவரே தெரிவித்துள்ள காரணங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வேடனின் ராப் பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைச் சொல்லும், அவர்களின் விடுதலையைப் பேசுகிற, ஆதிக்கத்தை துவம்சம் செய்கிற அரசியல் நிலைப்பாட்டை கொண்டதாக உள்ளது. இவரது பாடல்கள் கேரளா, தமிழ்நாடு, இந்தியா என மட்டும் இல்லாமல் சர்வதேச அரசியலையும் தனது ராப் பாடல்கள் மூலம் வேடன் பாடி வருகிறார். இதனால் அவருக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வேடன் தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.
வேடனுக்கு ஆதரவாக கேரள இளைஞர்கள் உறுதுணையாக நிற்கிறார்கள். அது அவருக்கு பலத்தை கொடுக்கிறது என்று கூறலாம். வேடனின் தந்தை கேரளாவைச் சேர்ந்த தலித், அதேபோல் அவரது தயார் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். இவர்களுக்கு பிறந்தவர்தான் வேடன். வேடனின் அம்மா இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக அங்கிருந்து இங்கு குடிபெயர்ந்தவர். அதேபோல் அவரது தந்தை சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்கொண்டவர். அதனால்தான் வேடனின் பாடல்களின் வரிகளும் வார்த்தைகளும் அவ்வளவு கூர்மையாகவும் ஆழமானதாகவும் உள்ளது.

இராவண பெரும் பாட்டன்: இந்நிலையில் வேடன் அளித்த பேட்டி ஒன்றில், எனது அடுத்த பாடல் ராவண பெரும் பாட்டனைப் பற்றியது. அந்த பாடல்கள் வெளியானால் என்னை வெடி வைத்துக் கொன்றாலும் கொல்வார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பேட்டியில் அவரது நெஞ்சில் 'அ' என்று பச்சை குத்தி உள்ளதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது அவர் அளித்த விளக்கம் பலருக்கும் வியப்பூட்டும் விதமாக உள்ளது.
ஏழு காரணங்கள்: அதாவது, நான் பச்சை குத்தியுள்ள 'அ' என்ற எழுத்திற்குள் மொத்தம் 7 அர்த்தங்களை மையமாக கொண்டு நான் பச்சை குத்தியுள்ளேன். அ என்றால் அம்மா, அ என்றால் அப்பா, அ என்றால் அன்பு, அ என்றால் அறிவு, அ என்றால் அழகு, அ என்றால் அரசியல் அ என்றால் அஞ்சாமை என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இவரைப் பார்த்து பிரமிப்பூட்டும் அளவிற்கு அது உள்ளது.

ஒடுக்குமுறை: வேடன் தனது வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதேபோல் புலியை கொன்று அதன் பல்லை கழுத்தில் அணிகலனாக அணிந்துள்ளார் என்றும் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இவரது இரண்டு கைதுகளும் திட்டமிடப்பட்டு அவர் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை தான் என பலர் தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











