Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீரபாண்டிய கட்டபொம்மன்.... இந்திய சினிமாவின் நிகரற்ற காவியம்!
கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, பார்ப்போரை வாய் பிளக்க வைத்த காவியப் படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அன்றைக்கு தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்ஜிஆரும் சிவாஜி கணேசனும்.
இருவருக்கென்றும் தனித்தனியான இயக்குநர்கள் குழு, தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் செயல்பட்ட நேரம்.
சிவாஜியும் இயக்குநர் பி ஆர் பந்துலுவும் கைகோர்த்து மிக அற்புதமான படைப்புகளைத் தந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இணைந்த முதல் படம் முதல் தேதி. ஆனால் அந்தப் படத்தை பிஆர் பந்துலு தயாரிக்க மட்டுமே செய்தார்.
அடுத்து தங்கமலை ரகசியம் படத்துக்காக 1957-ல் இணைந்தனர். அந்தப் படத்தை பிஆர் பந்துலுதான் தயாரித்து இயக்கினார். பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்த ஆண்டே சபாஷ் மீனா படத்தில் இணைந்தனர்.
இந்த இரு படங்களும் பெற்ற மாபெரும் வெற்றி, வீரபாண்டிய கட்டபொம்மனை எடுக்க இருவரையும் உந்தித் தள்ளியது.
சிவாஜியின் விருப்பம்
தென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்த மாவீரன் கட்டபொம்மன். தமிழகத்து கிராமங்களில் நாடகமாக நடத்தப்பட்டு வந்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் வரலாற்றை தனக்கேற்ற மாதிரி சினிமாவாக எழுத வேண்டும் என சக்தி கிருஷ்ணசாமியைக் கேட்டுக் கொண்ட சிவாஜி, அந்தப் படத்தை தன் வாழ்நாளின் மிகச் சிறந்த படமாக உருவாக்க வேண்டும் என இயக்குநர் பி.ஆர்.பந்துலுவைக் கேட்டுக் கொண்டார். சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் கதை வசனம் எழுத, ம.பொ.சிவஞானம் திரைக்கதை அமைத்து இருந்தார். ஜி.ராமநாதன் இசையில் இனிமையான பாடல்கள் தந்தார்.
லண்டனில்
1959-ம் ஆண்டு மே மாதம் லண்டனில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது. அதே தேதியில் தமிழகமெங்கும் இந்தப் படம் வெளியானது.
முதல் இந்திய நடிகர்
சிவாஜியின் நடிப்பு இணையற்றது, எவரோடும் ஒப்பிட முடியாதது என பாராட்டின பத்திரிகைகள். எகிப்து பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாகவும், சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தது. சர்வதேசப் பட விழா ஒன்றில், அதுவும் ஹாலிவுட் நட்சத்திரங்களும், எகிப்து அதிபரும் பங்கேற்ற பெரும் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமை சிவாஜி கணேசனுக்குக் கிடைத்தது.
மக்கள் மனங்களில்...
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே, நடிக்காமல் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். கட்டபொம்மனின் படைத் தளபதி வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், தம்பி ஊமத்துரையாக ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையம்மாளாக பத்மினி, எட்டப்பனாக வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி ராகினி, ஜாக்சன் துரையாக வந்த ஜாவர் சீதாராமன் ஆகியோர் மக்கள் மனதில் அந்தப் பாத்திரங்களாகவே இன்னும் வாழ்கின்றனர் என்றால் மிகையல்ல.
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக
மேற்கத்திய நாடுகளில் தயாரான பிரமாண்ட படங்களுக்கு இணையாக அந்தக்காலத்திலேயே போர்க்காட்சிகள் இடம்பெற்றிருந்தன வீரபாண்டிய கட்டபொம்மனில்.
வெள்ளி விழா
பாராட்டுகள் மட்டும் குவியவில்லை... பெரும் வசூலும் குவிந்தது இந்தப் படத்துக்கு. தொடர்ந்து 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட இந்தப் படம் அதே பெயரில் தெலுங்கிலும் அமர் ஷாகீத் என்ற பெயரில் இந்தியிலும் மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடப்பட்டது.
புத்தம் புதிய...
அன்று கேவா கலரில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்த தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில் 70 எம்.எம். திரைப்படமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் முழு வண்ணத்தில், டி.டி.எஸ் ஒலி கலவையுடன் படம் வெளியாகியுள்ளது.
100 அரங்குகள்
நேற்று இந்தப் படம் திரைக்கு சென்னையில் 12 தியேட்டர்களிலும் தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.
வரவேற்பு
தியேட்டர்களில் இன்றைய புதிய படங்களுக்குக் கூட இல்லாத வரையில் சிவாஜிக்கு பெரிய கட்-அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர் மன்றங்கள் சார்பிலும் கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சிவாஜி கட்-அவுட்களுக்கு தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்று படம் பார்த்து ரசித்தனர் அவரது ரசிகர்கள்.