ராஜ்குமார் போல ரஜினியையும் கடத்தத் திட்டமிட்டாரா வீரப்பன்?.. ராம் கோபால் வர்மா புதுத் தகவல்!
ஹைதராபாத்: சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ரஜினிகாந்தை கடத்தத் திட்டமிட்டிருந்ததாக இயக்குநர் ராம் கோபால் வர்மா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா என 2 மாநிலங்களையும் ஆட்டிப்படைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனை கடந்த 2004 ம் ஆண்டு அக்டோபர் 18 தேதி வீரப்பனை தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே தமிழக காவல்துறை அதிகாரி விஜயகுமார் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதனை அடிப்படையாக வைத்து 'கில்லிங் வீரப்பன்' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார்.

கில்லிங் வீரப்பன்
தமிழ்நாடு, கர்நாடகா என 2 மாநிலங்களையும் ஆட்டிப்படைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு, 'கில்லிங் வீரப்பன்' என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற மே 27 ம் தேதி வெளியாகிறது.

சிவராஜ்குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் வீரப்பனை சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வீரப்பன் வேடத்தில் சந்தீப் பரத்வாஜும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் யாக்னா ஷெட்டியும், வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்துள்ளனர்.

ராஜ்குமார்
பிரபல கன்னட நடிகரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி அவரை பணயக் கைதியாக 100 நாட்களுக்கும் மேல் வைத்திருந்து விடுதலை செய்தார். ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் வீரப்பனை சுட்டுக்கொல்லும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ரஜினிகாந்த்
இந்நிலையில் எப்போதுமே பரபரப்பைக் கிளப்பிய பழக்கப்பட்டு விட்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தை கடத்த வீரப்பன் திட்டம் தீட்டியிருந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''ராஜ்குமார் போல ரஜினிகாந்தை வீரப்பன் கடத்தி வைத்து மிரட்ட ரகசிய திட்டம் தீட்டியிருந்தார். இந்தப் படத்திற்காக அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் பலரிடம் பேசியபோது இதைக் கூறினார்கள்'' என்று கூறியுள்ளார்.

2004
ராம் கோபால் வர்மா கூறியுள்ளது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரு வேளை கில்லிங் வீரப்பன் படத்திற்கு தமிழகத்தில் கூட்டம் சேர்க்க இவ்வாறு கதையைக் கிளப்பியுள்ளாரா ராம்கோபால் வர்மா என்ற சந்தேகமும் எழுகிறது.


Click it and Unblock the Notifications











