சொகுசு கார் பதிவு வில்லங்கம்: நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை!
திருவனந்தபுரம்: போலி ஆவணங்களைக் காட்டி புதுச்சேரியில் கார்களை பதிவு செய்த வழக்கில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், அஜித் நடித்த தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் 'தமிழரசன்'படத்தில் நடித்துவருகிறார்.

பாஜக எம்.பியாகவும் இருக்கும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன், 2 சொகுசு கார்களை வாங்கினார். இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால், அதிக வரி செலுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதிவுசெய்தார். இங்கு பதிவு செய்தால் குறைந்த வரித்தொகை கட்டினால் போதும். பிரபலங்கள் பலர் இப்படிச் செய்வது வழக்கம். இதற்காக புதுச்சேரியில் வசிப்பதாக, போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் கார்களை பதிவு செய்துள்ளார் சுரேஷ் கோபி.
இதன் மூலம் ரூ.25 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் போலீசில் சரணடைந்த நடிகர் சுரேஷ் கோபி, கைதுசெய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரள மாநில கூடுதல் காவல்துறை இயக்குனர் டோமின்.ஜே.தக்கன்சேரி தெரிவித்துள்ளார்.
இதே போன்ற, போலி ஆவணங்கள் கொடுத்து சொகுசு கார் பதிவு செய்த வழக்கில் அமலா பால், நடிகர் பகத் பாசில் ஆகியோரும் ஏற்கனவே சிக்கினர். பகத் பாசில் அபராத தொகையை கட்டியதால் அவர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











