முதலமைச்சரை வைத்துக்கொண்டே ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்னு சொன்னேன்.. அதை மறந்துட்டேன்.. ரஜினி ஓபன் டாக்
சென்னை: சூப்பர் ஸ்டார், தலைவா என்று ரசிகர்களால் கொண்டாடுப்படுபவர் ரஜினிகாந்த். புகழ், பணம் ஆகிய இரண்டிலுமே உச்சத்தில் இருக்கும் ரஜினி இயல்பில் மிகவும் எதார்த்தமானவர். தனது மனதில் இருப்பதை எந்த அலங்காரமும் இல்லாமல் சொல்லக்கூடிய தன்மையால் சில சமயங்களில் விமர்சனங்கள், கிண்டல்கள், எதிர்ப்புகள், சர்ச்சைகள் ஆகியவைகளை சந்தித்திருக்கிறார். அப்படித்தான் திமுக அமைச்சர்களை ஓல்டு ஸ்டூடண்ட்ஸ் என்றும் கூறினார்.
ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான இரண்டு சிங்கிள்களும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பைதான் பெற்றிருக்கின்றன. கூலி முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் மீதும் அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ரஜினியின் இயல்பு: ஒருபக்கம் சினிமாவில் ஏகப்பட்ட புகழ், பணம் சம்பாதித்தாலும் மறுபக்கம் ஆரம்பகால ரஜினியாகவே அவர் இருக்கிறார். தனது மனதில் பட்டதை பேசுவதை மாற்றிக்கொள்ளாத அவர்; ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதேபோல் காவிரி பிரச்னையிலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போதும் அவர் சொன்ன கருத்துக்கள் எதிர்ப்புகளை சம்பாதித்தது. அதேபோல் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த சமயத்தில், தலையே சுத்திடுச்சு என்று கூறியது ட்ரோலையும் சந்தித்தன.
ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்: கடந்த வருடம்கூட மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றி இப்போதைய அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய ரஜினி, "சீனியர் அமைச்சர்கள் எல்லாம் பழைய மாணவர்கள். அதுவும் சாதாரணமான பழைய மாணவர்கள் இல்லை. அசாத்தியமானவர்கள். யாரும் ஃபெயில் ஆனதே கிடையாது. அனைவரும் ரேங்க் வாங்கிவிட்டு கிளாஸை விட்டு போகமாட்டேன் என்று இருப்பவர்கள். புதிய மாணவர்களை சமாளிக்கலம். பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டூ யூ" என்று பேசினார்.

சர்ச்சையானது: அவரது இந்தப் பேச்சு அந்த சமயத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்கையில் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதன் காரணமாக; வெற்றி பெரு விழா ஆனந்த விகடன் சார்பில் நடத்தப்பட்டது. அதில் ரஜினி, ரோகிணி, உதயசந்திரன் ஐஏஎஸ், கோபிநாத், சு.வெங்கடேசன், ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
ரஜினி பேச்சு: அதில் பேசிய ரஜினிகாந்த், நிறைய பேச வேண்டும் என அறிவு சொல்லும். எப்படி பேச வேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதை பேச வேண்டும், பேச கூடாது என்பதை அனுபவம் சொல்லும். இந்த அரங்கத்தில்தான் அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் கருணாநிதி பற்றி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், நான் உள்ளிட்டோர் கலந்துகொண்டோம்.
அப்படி பேசிவிட்டேன்: அமைச்சர்களும் கலந்துகொண்டார்கள். நான் எதார்த்தமாக பேசும்போது, 'ஓல்டு ஸ்டூடண்ட்ஸை சமாளிப்பது கஷ்டம்' என்று சொல்லிவிட்டேன். ஆனால், எனது மனதுக்குள்ளோ, 'பழைய மாணவர்களின் அனுபவம்தான் ஒரு இயக்கத்தின் தூண். அவர்கள் இல்லையென்றால் எந்த இயக்கமும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமில்லை சிகரங்களும்தான்' என்று பேச வேண்டுமென நினைத்தேன். ஆனால் அரங்கத்தில் இருக்கும் அனைவருமே நான் ஓல்டு ஸ்டூடண்ட் என்று சொன்னவுடன் சிரித்துவிட்டார்கள். அதில் நான் பேச வேண்டுமென்று நினைத்திருந்தது மறந்துவிட்டது. அதனால்தான், இப்போது வரும்போதே, 'மிஸ்டர் ரஜினிகாந்த்.. பார்த்து பேசு.. அனைவரும் உனது ரசிகர்கள் இல்லை' என யோசித்து பேசுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











