தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸாகிறது 'வெங்காயம்'!

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான படம் வெங்காயம். புதுமுகங்கள் நடித்த இந்தப் படத்தில், சத்யராஜ் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனைகளுக்கு கொடுக்கப்பட்ட எளிய வடிவமாக இந்தப் படம் பார்க்கப்பட்டது.
மூட நம்பிக்கையால் கற்பிழக்கும் பெண்கள், உயிரிழக்கும் சிறுவர்களின் பரிதாபத்தை நெஞ்சைத் தொடும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார் புதிய இயக்குநர் ராஜ்குமார்.
இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது, திரையுலகில் நிலவிய சூழலால் இந்தப் படத்துக்கு நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் இந்தப் படம் ஓடுகிறதா இல்லையா என்றுகூட தெரியாத நிலை. எனவே சில நல்ல படங்களுக்கு நேரும் விபத்து இந்தப் படத்துக்கும் நேர்ந்தது.
ஆனால் படத்தைப் பார்த்த சக படைப்பாளிகள், ராஜ்குமாரின் முயற்சி, துணிச்சலைப் பாராட்டினர். நார்வே தமிழ் திரைப்பட விழாவில் பிரதான போட்டிக்கு தேர்வாகியுள்ள படங்களுள் வெங்காயமும் ஒன்று.
ஆனால் இப்படியொரு படம் பெரும்பான்மை மக்களைப் போய் சேராமல் இருப்பது எத்தனை பெரிய கொடுமை என வாய்விட்டே கூறினர் சில இயக்குநர்கள். அவர்களில் சேரனும் ஒருவர்.
இப்போது சேரனின் சொந்தப் பட நிறுவனம் வெங்காயத்தை தமிழகம் முழுவதும் புதிதாக வெளியிடுகிறது. நாளை முதல் விளம்பரப் பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
ஏற்கெனவே படம் குறித்து வெளியான சாதகமான விமர்சனங்கள், இந்தப் படத்துக்கு கிடைத்த விருதுகள், பாராட்டுகள் போன்றவையே பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டதால், தியேட்டர்கள் கிடைப்பதிலும் பெரிய பிரச்சினை இருக்கவில்லை.
மார்ச் 23-ம் தேதி படம் வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் கூறுகையில், "சேரன் சாரின் கம்பெனி மூலமாக வெங்காயம் படத்தை மீண்டும் வெளியிடுகிறோம். ஒரு நல்ல படைப்பு எல்லோருக்கும் சேர வேண்டும் என்ற நல்ல உள்ளங்களின் ஆசைதான் இந்த மறுவெளியீட்டை சாத்தியமாக்கியுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











