வெங்கட் பிரபு இயக்குநராகி 15 வருஷம் ஆகிடுச்சு.. இப்போதும் எஸ்.பி.பியை மறக்காத அந்த குணம் இருக்கே!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை - 600028 படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.
இயக்குநராக 15 ஆண்டு காலம் சினிமாவில் அசத்தி வரும் வெங்கட் பிரபு அது தொடர்பாக வெளியிட்டுள்ள நன்றி 'போஸ்ட் கார்டில்' (அந்த டிசைன் அழகாக அப்படித்தான் இருக்கு) மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் சரண் ஆகிய இருவரையும் மறக்காமல் நினைவு கூர்ந்துள்ளார்.
மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ள வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மன்மத லீலை படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது.

ஜாலியான இயக்குநர்
சென்னை - 600028 படத்தில் ஏகப்பட்ட இளம் நடிகர்களை வைத்து அப்படியொரு ஜாலியான படத்தை இவர் இயக்குவார் அந்த படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதை யாரும் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அதனை சிறப்பாக சாதித்துக் காட்டியவர் வெங்கட் பிரபு.

அஜித்துக்கு பெரிய ஹிட்
சென்னை 28, கோவா, சரோஜா என செம ஜாலியான படங்களை இயக்கி கணிசமான வெற்றியை ருசித்து வந்த இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்போது கூட மங்காத்தா 2 படத்திற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிம்புவுக்கு சரியான கம்பேக்
அஜித்துக்கு எப்படி மங்காத்தா ஹிட் அடித்ததோ அதே போல சிம்புவுக்கு சரியான கம்பேக் படமாக மாநாடு அமைந்தது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான டைம் லூப் கதையை தமிழ் ரசிகர்களுக்கு எந்தவொரு குழப்பமுமின்றி குறைவான பட்ஜெட்டில் இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.

எஸ்.பி.பியை மறக்காத மனம்
"இந்த நாள் இனிய நாளாக இருப்பதற்கு காரணம் எஸ்பிபி சாரின் ஆசீர்வாதமும் என் நண்பன் சரண் நம்பிக்கையும் தான் 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் அவர்கள் சென்னை 600028 மூலம் என் திரைப் பயணத்தை தொடங்கி வைத்தார்கள். அதனால்தான், வெங்கட்பிரபு என்கிற நானும் சினிமா எனும் பெருங்கடலில் இன்று பதினைந்தாம் ஆண்டை நிறைவு செய்கிறேன்" என தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கற்றது சினிமா
"நான் சினிமாவில்தான் சினிமாவை கற்றுக்கொண்டேன் பிரபலமான இயக்குனர்களிடம் இருந்து சினிமாவைக் கற்றுக் கொள்ளும் சூழல் எனக்கு அமையவில்லை. ஆனாலும், புதுப்புது முயற்சிகள் செய்வதில் எனக்கு இருக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. அந்த முயற்சிகளில் சில படங்கள் வெற்றி பெற்றன, சில படங்கள் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது."

வெங்கட் பிரபு நன்றி
"எது எப்படி இருந்தாலும் நான்கைந்து வருடங்கள் இடைவெளி இருந்தாலும் கூட வெங்கட் பிரபு என்கிற ஒரு மனிதனை ஒரு போதும் மறந்து விடாமல் நான் ஒரு படத்தோடு வரும்போதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் மனதார வரவேற்கிறீர்கள், உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன் என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை எதிர்நோக்கும் இந்த வேளையில் என் சினிமா பயணத்தை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறேன் என்னோடு என்றும் துணை நிற்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நட்சத்திரங்கள் நண்பர்கள் ஊடகங்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி" எனக் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.


Click it and Unblock the Notifications











