கோட் படம் மத்த ஏரியாவில் அடிவாங்க காரணமே சிஎஸ்கே தான்?.. 58% அடிவாங்கிய வசூல்.. வெங்கட் பிரபு ஓபன்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் உலகம் முழுவதும் திங்கட்கிழமையான நேற்று வசூலில் 58 சதவீதம் அடிவாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட் திரைப்படத்தின் முதல் நான்கு நாட்கள் வசூல் தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்த நிலையில், மற்ற இடங்களில் சொதப்ப காரணமே சிஎஸ்கே தான் என வெங்கட் பிரபு ரசிகர்களுடனான ட்விட்டர் ஸ்பேஸில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அஜித்தின் மங்காத்தா திரைப்படம் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் பெட்டிங்கை வைத்து தான் உருவாகியிருக்கும். விஜய்யை வைத்து அவர் இயக்கிய கோட் திரைப்படத்தின் முதல் பாதி முழுக்க பாங்காக், ரஷ்யா என ஹாலிவுட் படம் போல சென்ற நிலையில், அதன் இரண்டாம் பாதி முழுக்கவே சிஎஸ்கே மேட்ச்சை சுற்றி நகர்ந்தது தான் படத்திற்கு பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கிய இந்த படமாவது 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெங்கட் பிரபு கிளைமேக்ஸில் செய்த சொதப்பல் தான் படத்தின் வசூல் குறைய காரணமானதாக குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன.
லியோ வசூலை முந்துமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அதை விட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வசூல் செய்யும் என நம்பி தயாரிப்பு தரப்பு 400 கோடி வரை முதலீடு செய்த நிலையில், 4 நாட்களில் 288 கோடி வசூலை கோட் படம் அள்ளியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸை தவிர்த்து மற்ற இடங்களில் படம் சரிவை சந்தித்த நிலையில், வசூலில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளதாகவும் அதிகபட்சம் 500 கோடி வருமா? என்பதே சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.
சிஎஸ்கே தான் காரணம்?: கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் முழுவதும் சிஎஸ்கே போட்டியின் பேக்கிரவுண்டில் நடப்பது போலவும், தோனி விளையாடி சிக்ஸ் அடித்து சென்னையை ஜெயிக்க வைப்பது போன்றும் வெங்கட் பிரபு சிஎஸ்கே ரசிகராக தமிழ் ஆடியன்ஸை கவர்வதற்காக கிளைமேக்ஸை அப்படி வைத்த நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி பெல்ட்டில் உள்ள ரசிகர்களுக்கு அது பிடிக்காமல் போனது தான் கோட் படத்தின் வசூல் அந்த இடங்களில் அடிவாங்க காரணம் என வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்தியா மேட்ச்சாக இருந்திருந்தால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இன்னமும் படத்தை கொண்டாடி இருப்பார்கள் என்றே கூறுகின்றனர்.
சிஎஸ்கே வெறியன்: வெங்கட் பிரபு சிஎஸ்கே வெறியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தினால் தான் ஸ்ட்ரீட் கிரிக்கெட் கதையை வைத்து சென்னை 28 படத்தையே அவர் இயக்கியிருந்தார். ஆனால், அனைத்து மக்களையும் கவரும் யூனிவர்ஸல் கதையை அவர் கையாளாமல் விட்டது மற்றும் க்ளோனிங்கை சீக்கிரமே கொண்டு வராமல் அப்பா, மகன் படமாகவே மாற்றியது உள்ளிட்ட விஷயங்கள் தான் படத்திற்கு பின்னடைவு ஏற்பட காரணம் என்றும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து படம் சிறப்பாகவே ஓடுகிறது. மிகப்பெரிய வசூல் வேட்டையை தான் கோட் திரைப்படம் மிஸ் செய்து விட்டது.


Click it and Unblock the Notifications











