Thalapathy 68 - தளபதி 68.. கனவு நனவானது - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) விஜய்யை வைத்து படம் இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு அதுகுறித்து தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் உலகம் முழுக்க வெளியாகிறது.

எப்போது முடிகிறது ஷூட்டிங்: ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்துவிட்டதால் அந்த தேதியில் ரிலீஸ் செய்ய லோகேஷ் கனகராஜ் கடுமையாக வேலை செய்துவருகிறார். இப்போது நடந்துவரும் ஷூட்டிங் தமிழ்நாட்டிலேயே ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறதாம். அன்றோடு ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கவிருக்கின்றன. ஜூலை மாதத்தில் விஜய் லியோ படத்துக்காக டப்பிங் கொடுக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
தளபதி 68: லியோ படம் எப்படி உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் அடுத்த படமும் அதே எதிர்பார்ப்பில் இருக்கிறது. அட்லீதான் படத்தை இயக்குவார் என முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக தெலுங்கு இயக்குநர்கள் சிலரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஹேப்பி மூடை இழந்தனர். அதனைத் தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என தகவல் வெளியானது.

விஜய்க்கு ஒரு மெகா ஹிட் பார்சல்: வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய வேண்டும் என மங்காத்தா படத்தின் வெற்றிக்கு அடுத்ததாகவே தளபதி ரசிகர்கள் கூறிவந்தனர். அப்படி இணையும்பட்சத்தில் நிச்சயம் அஜித்துக்கு எப்படி மங்காத்தா மெகா ஹிட்டானதோ அதேபோல் விஜய்க்கும் ஒரு மெகா ஹிட் கிடைக்கும் என கூறினர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 25ஆவது படமாகவும் இது அமைகிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் படத்துக்கு யுவன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு மகிழ்ச்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், கனவு நனவானது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கும் தனது நன்றியை வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட காலத்துக்கு பிறகு விஜய்யுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











