34 ஆண்டுகளுக்குப் பிறகு கரகாட்டக்காரன் 2... அடம்பிடிக்கும் ராமராஜன்... நடித்தால் ஹீரோ தான்!
சென்னை: ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன்.
1989ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனைப் படைத்தது.
கிராமத்துப் பின்னணியில் உருவான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
கரகாட்டக்காரன் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்கை அமரனின் கரகாட்டக்காரன்
1989ம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், சந்தான பாரதி, கோவை சரளா, வடிவுக்கரசி, வாகை சந்திரசேகர் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இந்தப் படம் வெளியானது. சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் அப்டேட் வெர்ஷன் தான் கரகாட்டக்காரன். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

கோலிவுட் காமெடி திருவிழா
இளையராஜாவின் இசையில் பாடல்களும், கவுண்டமணி, செந்தில் ஜோடியின் காமெடியும் கரகாட்டக்காரன் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்ஸாக அமைந்தது. ரொம்பவே எளிமையான கதைக்களத்தை வைத்துக்கொண்டு திரைக்கதை, மேக்கிங் போன்றவற்றில் அதிரிபுதிரியாக கலாட்டா செய்திருந்தார் கங்கை அமரன். 1989 ஜூன் மாதம் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் ஓடி மகத்தான சாதனைப் படைத்தது. கவுண்டமணி - செந்திலின் வாழைப்பழ காமெடி பற்றி சொல்லவே வேண்டாம்.

கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம்
கனகாவிற்கு இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமராஜனும் கனகாவும் கரகாட்டம் ஆடும் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வெங்கட் பிரபு ரீமேக் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால், அது அவ்வளவு எளிதானது இல்லை என வெங்கட் பிரபு மறுத்துவிட்டார். இந்நிலையில், கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்கலாம் என வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ராமராஜன் பிடிவாதம்
கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்திற்கான அனுமதியை தனது தந்தை கங்கை அமரனிடம் வெங்கட் பிரபு வாங்கிவிட்டாராம். இதனால் விரைவில் இப்படத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ராமராஜன் அப்பா கேரக்டரில் நடிப்பார் என தகவல் வெளியானது. ஆனால், அவர் தான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால், மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம்.

கெஸ்ட் ரோலில் ராமராஜன்
ராமராஜனுக்குப் பதிலாக சிவா நடித்தால் மட்டுமே ஒர்க் அவுட் ஆகும் என வெங்கட் பிரபு உறுதியாக உள்ளாராம். அதேநேரம், ராமராஜன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் முடிந்ததும் விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளையராஜாவுக்கு பதிலாக யுவன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் கோலிவுட் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











