Kovai Guna:கோவை குணா இறப்புக்கு காரணம் தெரியுமா?.. வெங்கடேஷ் ஆறுமுகம் ஓபன் டாக்
Kovai Guna Death News (கோவை குணா மரணம்) in Tamil:மிமிக்ரி கலைஞர் கோவை குணாவின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து அவரது நண்பரும், கலக்கப்போவது யாரு சீஸன் 2 சாம்பியனுமான வெங்கடேஷ் ஆறுமுகம் தெரிவித்திருக்கிறார்.
மிமிக்ரி கலைஞர்களுக்கான முன்னோடிகளில் ஒருவர் கோவை குணா. அடுத்தவரின் குரலை மட்டும் வெளிப்படுத்தாமல் அவர்களின் உடல்மொழியையும் அச்சு அசலாக வெளிக்கொண்டுவரும் திறமைசாலிகளில் ஒருவர்.

அசாத்திய திறமை கொண்ட கோவை குணா
கலக்கப்போவது யாரு சீஸன் 1ன் டைட்டில் வின்னரான கோவை குணா அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர். அந்த நிகழ்ச்சியிலும் தனது பலகுரல் திறமையால் பலரையும் வியக்கவைத்தார். பலகுரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது பலகுரலில் கோவை குணா பாடவும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். இருப்பினும் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு செல்வதில் அவருக்கு பெரிதாக ஆர்வம் இருந்திருக்கவில்லை. அல்லது யாரும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை.

கோவை குணா உயிரிழப்பு
கடந்த சில வாரங்களாக கோவை குணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியுள்ளது. அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

கோவை குணாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
இந்நிலையில் கோவை குணாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து மதன்பாப் உள்ளிட்டோர் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் குணாவுடன் நெருங்கி பழகிய வெங்கடேஷ் ஆறுமுகம் குணாவின் இறப்பு குறித்து கூறுகையில், "கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துவந்தார்.

அவருக்கு நண்பர்கள் உதவிகள் செய்தோம்தான்
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை அவருக்கு செய்துகொண்டுதான் இருந்தோம். ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் இறந்துவிடுவார் என்றே அனைவரும் நினைத்தோம். அந்த அளவுக்கு அவரது உடல்நிலை இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அவரை உற்சாகமாக வைத்திருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வுதான்.

அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு
கொரோனாவால் லாக் டவுன் போடப்படுவதற்கு முன்புவரை பல நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருந்தார். ஆனால் கடந்த ஏழு எட்டு மாதங்களாக அவரால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இரண்டு மகளுக்குமே திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.அவருடைய இந்த இழப்பு எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு" என கூறினார்.

உருக்கமாக பதிவிட்டிருந்த வெங்கடேஷ் ஆறுமுகம்
முன்னதாக கோவை குணாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வெங்கடேஷ் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில், "சிவாஜி கணேசனைப் போல சிம்மக்குரலோன்! பல குரல் திறமையில் சிரிப்புக் குரலோனும் கூட! மிமிக்ரி மட்டுமின்றி அந்தந்த நடிகர்களின் உடல் மொழியையும் வெளிக் கொண்டுவரும் ஒப்பற்ற கலைஞன்! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்களை தனது அரிய நகைச்சுவைத் திறனால் சிரிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞன்.
இன்று நம்மோடு இல்லை! அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் அசத்தல் குடும்பத்திற்கும் இது ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறோம்! கண்ணீருடன் அசத்தல் குடும்பத்தினர்" என உருக்கத்துடன் நீண்ட பதிவை பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











