இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கிண்டல்கள்: இயக்குநர் வெங்கட்பிரபு கொந்தளிப்பு
சென்னை: அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி சன் டிவியில் அளித்த பழைய பேட்டியை முன்வைத்து, ஃபேஸ்புக், டிவிட்டரில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன். நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்" இதுதான் லிங்குசாமியின் பேட்டி. இந்த பேட்டியை முன் வைத்து தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கேலித் தாக்குதல்களை கடுமையாக சாடி, வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார்.

சினிமா இயக்குவது சாதாரணமா?
"நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.

கடவுளே தப்பு செய்கிறார்
லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். 'ஜி' படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?

அர்த்தமற்ற கிண்டல்கள்
நீங்கள் சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான்.

கிண்டல் மட்டும்தான்
உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?

நல்ல ரசிகர்களா?
நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், 'தங்கமீன்கள்' ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?

நல்ல படங்களை ரசிக்கவில்லையே
உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கொந்தளித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு.


Click it and Unblock the Notifications











