15 ஆண்டுகளை நிறைவு செய்த வெண்ணிலா கபடி குழு.. விஷ்ணு விஷால் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், இதில், சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் ஒரு கிராமத்தில் பல பிரிவுகளை சேர்ந்த இளைஞர்கள், கபடி விளையாட்டு மீது தீராத காதல் கொண்டிருக்கிறார்கள். காதல் இருக்கும் அளவிற்கு அவர்களுக்கு ஆதரவு கிடைக்காததால், வேலையை பார்த்துக் கொண்டு, பார்ட் டைம் ஆக விளையாடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் கிராமத்தினரால் ஏச்சு பேச்சை சந்தித்து, அதற்கு பதிலடி தர, பழநியில் நடக்கும் கபடி போட்டியில் கோப்பை வென்று, ஊருக்கு தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள்.

அழகான கிராமத்து மண் வாசனை, சொல்லாத காதல், நண்பர்களின் அரட்டை என படம் முழுக்க ரசிக்கும் படி இருந்ததால், இந்த படம் வசூலை அள்ளியது. இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனாலும், இந்த படத்தில் வரும் சூரியின் பரோட்டா காமெடியை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெண்ணிலா கபடி 15 ஆண்டு நிறைவு: அதில், என் முதல் படமான வெண்ணிலா கபடி குழு வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர் கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்த, என் இயக்குனர் சுசீந்திரனுக்கு, இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தெளிவாக இருக்கிறேன்: திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்ல முயன்றுள்ளேன். எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்த ஆண்டு ரொம்ப ஸ்பெஷல்: என் திரைப்பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. லால் சலாம் என்ற அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான, மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி என அந்த அறிக்கையில் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











