வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்: அடுத்தடுத்து சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சுசிந்திரன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தவர் மாயி சுந்தர்.
வெண்ணிலா கபடி குழு படம் உட்பட, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், கட்டா குஸ்தி, அமீரின் உயிர் தமிழுக்கு போன்ற படங்களிலும் மாயி சுந்தர் நடித்துள்ளார்.
மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோய்க்காக தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் மாயி சுந்தர் காலமானது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி நடிகராக மாயி சுந்தர்
சரத்குமார் நடித்த மாயி படத்தில் நடிகராக அறிமுகமானவர் சுந்தர். அதன்பின்னர் மாயி சுந்தர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த அவர், விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படத்திலும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். மாயி படத்தை விடவும் இதுவே அவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. கடந்த 2009ம் ஆண்டு கபடியை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, அப்புகுட்டி ஆகியோரும் நடித்திருந்தனர். மாயி, வெண்ணிலா கபடி குழு உட்பட துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்சிக்காரன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மாயி சுந்தர் காலமானார்
சமீபத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடித்திருந்த மாயி சுந்தர், தற்போது அமீரின் 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாயி சுந்தர், அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டதாக நடிகர் அம்பானி சங்கர் தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 50வயதான அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி
நடிகர் மாயி சுந்தர் உயிரிழந்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் 3ம் தேதி தான் வெண்ணிலா கபடி குழு பட புகழ் ஹரிவைரவனும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரைத் தொடர்ந்து தற்போது மாயி சுந்தரும் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாயி சுந்தர் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து சோகம்
ஒரேபடத்தில் இணைந்து நடித்திருந்த இரண்டு காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல வருடங்களாக திரைத்துறையே தங்களது வாழ்வாதாரம் என நம்பியிருந்த இரண்டு கலைஞர்களின் கனவு கலைந்துவிட்டதாக ரசிகர்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹரி வைரவனை தொடர்ந்து மாயி சுந்தரின் உயிரிழப்பு திரையுலகுக்கு இழப்பாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











