Dileep: ஒரு குற்றம்.. 8ஆண்டு விசாரணை.. இன்று தீர்ப்பு.. சிக்குவாரா நடிகர்.. வழக்கு கடந்து வந்த பாதை!
சென்னை: கேரளத்தில் ஒரு முன்னணி நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று நடந்த இந்தத் துயரமான நிகழ்வு, தற்போது ஒன்பது ஆண்டுகளை எட்டியுள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், மலையாளத் திரையுலகையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நடிகை திலீப் உள்ளிட்ட பலரைச் சுற்றிய பல திருப்பங்களுடன் கூடிய நீண்ட சட்டப் போராட்டத்தை உருவாக்கியது.
இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, முக்கியக் குற்றவாளியான 'பல்சர்' சுனி கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர். ஆரம்ப விசாரணைகளில், இந்த பலாத்கார சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இது ஒரு சாதாரண கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கல்ல என்பது அப்போதே புரிந்தது.

நடிகர் திலீப்: இந்த வழக்கில் நடிகர் திலீப்பின் பெயர் முதலில் வெறும் வதந்திகளாகவே வெளிவந்தபோதிலும், ஜூலை 10, 2017 அன்று அவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவரது கைது செய்யப்பட்டது மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பல அதிர்ச்சிகரமான விவாதங்களுக்கும் வழிவகுத்தது சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப், அக்டோபர் 3, 2017 அன்று ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவரது ஜாமீன் விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இந்த காலகட்டத்தில், திலீப் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தன.
10வது குற்றவாளி: 2017ஆம் ஆண்டு நவம்பரில், காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப்பத்திரிகையில், நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த நடவடிக்கை, இந்த வழக்கில் திலீப்பின் பங்கு இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதுடன், அவர் மீதான சட்ட நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தியது. வழக்கின் விசாரணைப் பாதை முழுவதும் பல சவால்களைச் சந்தித்தது. பாதிக்கப்பட்ட நடிகை, நீதிக்காகக் குரல் கொடுக்கவும், தனது போராட்டத்தைத் தொடரவும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்று, வழக்கு ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைகள் தொடங்கின. பல முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், சில சாட்சிகள் பிறழ் சாட்சியாகவும் மாறினார்கள்
8 ஆண்டு விசாரணை: இந்த நேரத்தில், 2022ஆம் ஆண்டு, இயக்குநர் பாலசந்திரகுமார் சில புதிய தகவல்களை வெளியிட்டு, வழக்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. திலீப் மீதும், அவருடைய சில உறவினர்கள் மீதும், இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இது வழக்கை மேலும் சிக்கலாக்கியது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்த வழக்கு பல்வேறு சட்டப் போராட்டங்களையும், பலமுறை நீதிமன்ற மாற்றங்களையும், சாட்சி விசாரணைகளையும் சந்தித்துள்ளது. நடிகை தாக்குதல் வழக்கு சமூகத்திலும், ஊடகங்களிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்டம் அதன் பாதையில் மெதுவாக நகர்ந்தாலும், இறுதிக் கட்டத்தை எட்டி வருவதாகத் தெரிகிறது.
இன்று தீர்ப்பு: 8 ஆண்டுகள் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை முடிவடைந்தது. திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று வெளியிடுகிறார். இதில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்குமா? வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











