திரையுலகில் அதிர்ச்சி.. பிரபல வில்லன் நடிகர் மரணம்.. என்ன ஆச்சு?..சோகத்தில் ரசிகர்கள்
ஹைதராபாத்: ஹரி இயக்கிய சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கோட்டா சீனிவாச ராவ் தொடர்ந்து கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழைவிடவும் தெலுங்கில்தான் அவர் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சமீபத்தில்கூட அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் கோட்ட சீனிவாச ராவ். மருத்துவரின் மகனான இவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் காலப்போக்கில் இவருக்கு நாடகங்கள், சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. இதன் காரணமாக நடிகராக முடிவு செய்து; விடாமல் முயற்சி செய்து நாடகங்களில் நடித்து பின்னர் 1978ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் சீனிவாச ராவ்.
பிஸி நடிகர்: முதல் படம் அவருக்கு சரியான வெளிச்சத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். ஒருவழியாக 80களில் அவருக்கான வெளிச்சம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்துக்கொண்டே இருந்ததால் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார். ஒரே வருடத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்த வரலாறெல்லாம் உண்டு.

தமிழில் அறிமுகம்: தெலுங்கில் பிஸியாக நடித்துவந்த அவரை; இயக்குநர் ஹரி தான் இயக்கிய சாமி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் செய்தார். அப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரை ஏற்று அதகளம் செய்திருந்தார். ஒவ்வொரு சீனிலும் அவரது நடிப்பு பட்டாசாக இருந்தது. இதன் காரணமாக சாமி படத்தில் விக்ரமுக்கு பிறகு கோட்டாதான் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிலும் பிஸி: சாமி படத்தின் வெற்றி அவரை கோலிவுட்டிலும் பிஸியாக்கியது. அதன்படி பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற வில்லன் ரோலை ஏற்றிருந்தார். சாமி படத்தில் எப்படி ஸ்கோர் செய்தாரோ அதேபோல் திருப்பாச்சியிலும் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து கோ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருந்தார். திடீரென அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன.
அதிர்ச்சி தந்த புகைப்படம்: சூழல் இப்படி இருக்க அவருக்கு சமீபமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அண்மையில்கூட அவர் தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் ஆளே அடையாளம் தெரியாமல், கால்களில் கட்டு போட்டபடி அமர்ந்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அய்யோ சாமி பட வில்லனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டர்கள்.
உயிரிழந்த கோட்டா சீனிவாச ராவ்: இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் ஜுப்ளி ஹில்ஸில் இருந்த அவர் இன்று காலை உடல்நல குறைவால் உயிரிழந்தார். கடந்த சில காலமாகவே அவர் சிகிச்சையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 83 ஆகும். கடந்த பத்தாம் தேதிதான் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய இரண்டு நாட்களில் கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











