பழம்பெரும் நடிகை பேபி சரோஜா காலமானார்.. தடுக்கி விழுந்தா நம்மூர்ல ஒரு சரோஜா கிடைக்க இவர்தான் காரணம்!
பழம் பெரும் நடிகை பேபி சரோஜா காலமானார்.
Recommended Video
மும்பை: தமிழ் சினிமாவில் 30களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பழம்பெரும் நடிகை பேபி சரோஜா மும்பையில் காலமானார்.
1930களில் வெளிவந்த பல சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னியவர் நடிகை பேபி சரோஜா. தமிழ் சினிமா பிதாமகர் இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகள் தான் இவர். பால யோகினி, தியாகபூமி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பாலயோகினி படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்தனர். அப்படத்தில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய 'கண்ணே பாப்பா' பாடல் அன்றைய தேதியில் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்தது.
அந்த படம் வெளியான பிறகு, பலரும் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சரோஜா என பெயர் வைத்தார்களாம். தியாகபூமி படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய 'கிருஷ்ணா நீ பேகனே பரோ' பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.
நடிப்பது மட்டுமின்றி இசையில் பேபி சரோஜா புகழ்பெற்று விளங்கினார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா என்பது கூடுதல் தகவல். பேபி சரோஜா ஜப்பான் வரை பிரபலமானவர். அந்த காலத்திலேயே பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அங்கு பிரபலமாயிருந்தனவாம். சரோஜாவை செர்லி டெம்பிள் ஆஃப் தமிழ் சினிமா என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான பேபி சரோஜா, திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், தனது 70 வயதிலும் கூட சுறுசுறுப்பாக ஜப்பானிய காகிதக் கலையைக் கற்றுத் தேர்ந்தார் சரோஜா.
தற்போது 88 வயதான அவர் வயோதிகத்தின் காரணமாக உடல் நலிவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். சரோஜாவின் மரணச் செய்தி கேட்டு திரையுலகப் பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











