தூக்கமில்லை.. மனவேதனையில் தவிக்கிறேன்.. தயவு செய்து நிலத்தை காப்பாத்தி கொடுங்க..ஜெயசித்ரா!
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ பேரழகி, நடிப்பில் உச்சம்தொட்ட பல திறமையான நடிகைகளை நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி திறமைக்கும் அழகுக்கும் பெயர் போனவர் தான் நடிகை ஜெயசித்ரா. குறத்தி மகன் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினா அறிமுகமான இவர், சொல்லத்தான் நினைக்கிறேன், வெள்ளிக்கிழமை விரதம், இளமை ஊஞ்சலாடுகிறது, சினிமா பைத்தியம் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜெயசித்ரா: வயது மூப்புகாரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா தற்போது செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அதில், ஒரு விண்ணப்பத்தை நேரடியாக முதல்வர் ஐயா அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தான் இந்த செய்தியாளர் சந்திப்பு என்றார். மகாபலிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 120/1c என்ற முகவரியில் எனக்கு ஒரு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை 1976 ஆம் ஆண்டு நான் வாங்கினேன். அந்த நிலம் வாங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டில், 'லேபர் வெல்ஃபேர் போர்ட்' இந்த நிலத்தை கையகப்படுத்தி கொண்டது. இதன் ஒரிஜினல் பாத்திரம் என்னிடம் தான் இருக்கிறது.

50 வருஷமாச்சு: ஜவஹர்லால் நேரு விடுதியை கட்டுவதற்காக அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டார்கள். அந்த நிலத்தின் பரப்பளவு 3 ஏக்கர் 96 சென்ட், இந்த நிலத்தினுடைய ஓனர்கள் ஆறாமுதம், பூமாதேவி மற்றும் நான் என மூன்று பேர் இருக்கிறோம். இதில் இருவருடைய நிலத்தில் 'லேபர் போர்டு' கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். என்னுடைய நிலம் தற்போது வரை காலியாக தான் இருக்கிறது. இதுகுறித்து 'லேபர் வெல்ஃபேர் போர்ட்' நான் பேசிய போது, இனிமேல் தான் கட்டிடம் கட்டப் போகிறோம் என சொன்னார்கள். ஆனால், 50 வருடமாகியும் தற்போது வரை அந்த இடத்தில் எந்த விதமான கட்டடமும் கட்டவில்லை.
நிலத்தை மீட்டு தாருங்கள்: இரு தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட 50 வருடங்களாக நடத்தப்பட்டு கடந்த மாதம் தான் அந்த ஆர்டர் டிஸ்மிஸ் ஆனது. இதுகுறித்து, நான் முதல்வரை சந்தித்து பேச வேண்டுமென நினைத்தேன். இதற்காக பலவிதமான முயற்சிகளை செய்தேன். இதுவரை அவரை என்னால் நேரில் சந்தித்து பேச முடியவில்லை. இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலமாக முதல்வரிடம் என்னுடைய பிரச்சனையை தெரிவிக்க வேண்டும் என உங்களை அழைத்து கேட்கிறேன். இன்னும் அந்த நிலம் காலியாக தான் இருக்கிறது. முதல்வர் அவர்கள் எத்தனையோ நல திட்டங்களை பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் செய்து வருகிறார்.
வேண்டுகோள்: அதேபோல இந்த விஷயத்தை அவர் மனதில் கொண்டு என் நிலத்தை எனக்கு காப்பாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அந்த நிலத்தால் பலவிதமான கஷ்டங்கள், மன உளைச்சல், வேதனை நான் அடைந்து விட்டேன். அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்த வண்டிக்கார மகன், பூக்காரி என்கிற படங்களில் நடித்து நான் வாங்கிய சம்பளத்தில் தான் அந்த நிலத்தை என் அம்மா வாங்கினார்கள். அது வெறும் நிலம் மட்டுமில்லை, என் அம்மா எனக்காக வாங்கிய நிலம் என்பதால் முதல்வர் அவர்கள் தயவு செய்து அந்த நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications