பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை நந்தா, மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.
75 வயதுடைய நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.
நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி நடிகர், நடிகைகள் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகை நந்தாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நடிகை நந்தா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் கால் பதித்தவர். தனது முதல் படமான 'தூபன் அவுர் தியா'வில் தனது சொந்த மாமாவுடன் நடித்தார். இந்த படம் கடந்த 1956-ம் ஆண்டு வெளிவந்தது.
பின்னர் 'பாபி', தேவ் ஆனந்தின் 'கலாபசார்', 'தி ட்ரெயின்' மற்றும் 'தூல் கா பூல்' ஆகிய திரைப் படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்தார். 1959-ம் ஆண்டில் வெளியான 'சோட்டி பெஹன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது முழு திறமையையும் நிரூபித்த நந்தா, மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
தீன் தேவியான், கும்நாம் போன்றவை அவர் நடித்த மேலும் சில படங்கள். அவர் கடைசியாக நடித்தது 1983-ல் வந்த பிரேம் ரோக்.
திருமணம் ஆகாதவர்
மேலும், அவரது நடிப்பில் வெளியான 'அஞ்சால்' திரைப்படம் வெற்றி பெற்றதன் மூலம் நடிகை நந்தாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
நடிகை நந்தா திருமணம் ஆகாதவர். வெர்சோவாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அவர் வசித்து வந்தார்.


Click it and Unblock the Notifications












